உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எம்ஜிஆர் பற்றி 'கிண்டலாக' பேசிய தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத்

எம்ஜிஆர் பற்றி 'கிண்டலாக' பேசிய தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத்


தெலுங்குத் திரையுலகத்தின் அந்தக் கால நடிகர்களில் முக்கியமானவர் காந்தா ராவ். 1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர். அந்தக் காலப் புராணப் படங்களில் நாரதர் வேடத்தில் நடித்து புகழ் பெற்றவர். அவரது பெயரில் வழங்கப்படும் 'காந்தா ராவ் நினைவு தேசிய விருது' தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத்திற்கு வழங்கப்பட்டது. அதற்கான நிகழ்ச்சி நேற்று முன்தினம் ஹைதராபாத்தில் நடைபெற்றது. அரசியல், திரையுலகப் பிரமுகர்கள் பலர் அதில் கலந்து கொண்டனர்.

விருதைப் பெற்றுக் கொண்ட ராஜேந்திர பிரசாத் பேசுகையில், காந்தா ராவ் திறமையைப் பற்றிப் பேசுவதற்காக தமிழ் நடிகரும் முன்னாள் முதல்வருமான மறைந்த எம்ஜிஆர் பற்றி கிண்டலாகப் பேசியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“மிகப் பெரிய தமிழ் நடிகரான எம்ஜிஆர் கூட காந்தா ராவ் நடிப்பைப் பார்த்து பயந்தார். அவரது நடிப்பைப் பார்த்து 'அம்மா பாபோய்' என சிறுநீர் போய்விடுவார்,” என தெலுங்கில் சிறுமைப்படுத்திப் பேசினார். அவரது பேச்சும் உடல்மொழியும் மிகவும் கிண்டலாக இருந்தது. இதையடுத்து பலரும் இது குறித்து தங்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர்.

இதற்கு முன்பும் சில சமயங்களில் இப்படியான சில அவதூறு பேச்சுக்களைப் பேசியவர் ராஜேந்திர பிரசாத். தெலுங்கு காமெடி நடிகர் ஆலி, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் பற்றி அவர் பேசிய அவதூறு பேச்சுக்கள் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தின.

எம்ஜிஆர் குறித்து ராஜேந்திர பிரசாத் அவதூறாகப் பேசியதற்கு இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !