கவுதம் மேனன் மீது வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கு ரத்து
இயக்குனர், நடிகர் கவுதம் வாசுதேவ் மேனன், போட்டான் கதாஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் இயக்குனராகவும் இருந்தார். இந்த நிறுவனம், கடந்த 2013- 14ம் நிதியாண்டில் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யவில்லை எனக் கூறி அந்த நிறுவனத்துக்கு எதிராகவும், அதன் இயக்குனராக இருந்த கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோருக்கு எதிராகவும் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கவுதம் வாசுதேவ் மேனன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு, விசாரணைக்கு வந்தது.
'கவுதம் வாசுதேவ் மேனன் கடந்த 2011ம் ஆண்டே போட்டான் கதாஸ் நிறுவனத்தின் இயக்குனர் பதவியில் இருந்து விலகி விட்டார். அந்த தகவல் முறையாக கம்பெனிகள் பதிவாளருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் 2013-14ம் நிதியாண்டில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என்று வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கு கவுதம் மேனனை பாதிக்காது என்று கவுதம் மேனன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், குறிப்பிட்ட நிதியாண்டுக்கு முன்பே இயக்குனர் பதவியில் இருந்து கவுதம் வாசுதேவ் மேனன் விலகி விட்ட நிலையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை என்று அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, அந்த வழக்கு ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டது.