இறுதிக்கட்டத்தில் நடிகர் சங்க கட்டடம் : திறக்கப்போவது எந்த முதல்வர்...
ஒருகாலத்தில் தென்னிந்திய சினிமாவின் தலைமையிடமாக சென்னை இருந்தது. அதனால் அன்றைய காலத்தில் நடிகர் சங்கத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் என பெயர் வைத்திருந்தனர். இன்றும் அதே பெயரில் இந்த சங்கம் தொடருகிறது. எம்ஜிஆர், என்எஸ் கிருஷ்ணன், சிவாஜி, விஜயகாந்த், சரத்குமார் என்று இந்த நடிகர் சங்கத்தை ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பலர் பலப்படுத்தினர்.
நடிகர் சங்கத்தின் பழைய கட்டடம் இடிக்கப்பட்டு பிரமாண்டமாக தயாராக இருந்தது. ஆனால் பொருளாதார சிக்கல், வழக்கு என பல தடங்கல்கள் ஏற்பட்டன. பின்னர் நடிகர் சங்கத்திற்கு நாசர் தலைமையில் பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி போன்ற நிர்வாகிகள் பலரும் சேர்ந்து புதிய கட்டடத்திற்கான பணிகளை தீவிரப்படுத்தினர். சென்னை, தி நகரில் புதிய கட்டடம் கட்ட ரஜினி, கமல், விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்கள், திரையுலகினர் நிதி உதவி அளித்தனர். தற்போது இந்த கட்டடம் முடியும் தருவாயில் உள்ளது. நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் இந்த பிரம்மாண்டமான கட்டடம், விரைவில் திறக்கப்பட உள்ளது.
இந்த நடிகர் சங்க கட்டடம் தயாரான பிறகு நடிகர் சங்கத்தை திறந்து வைக்கக் கூடிய வாய்ப்பு எந்த முதல்வருக்கு அமையப் போகிறது என்று தெரியவில்லை. தற்போதைய முதல்வராக இருக்கும் ஸ்டாலினா அல்லது அதிமுக.,வின் எடப்பாடியா அல்லது அரசியல் களத்தில் புதிதாக களமிறங்கி போட்டியிட்டுள்ள நடிகர் விஜயா என்ற கேள்வி திரையுலகினர் மத்தியில் இருக்கிறது. அதற்கான விடை மே 4 அன்று தேர்தல் முடிவு வெளியானதும் தெரிந்துவிடும்.