ஆர்.பி.சவுத்ரிக்கு இரங்கல், விஜய்க்கு ஆதரவு : சரி, கமல் எங்கே?
பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மறைந்த நிலையில் ரஜினி உள்ளிட்ட பிரபலங்கள் அவர் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். ஆனால் கமல்ஹாசன் வரவில்லை. அவரின் மறைவு எனக்கு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அளிக்கிறது. அவர் ஒரு தைரியமான புதுமைப்பித்தன் மற்றும் பல புதிய கலைஞர்களுக்கு வாய்ப்பளித்து திரையுலகில் ஒரு சரணாலயமாகத் திகழ்ந்தவர் என்று கமல்ஹாசன் குறிப்பிட்டு அறிக்கை விட்டார்.
தமிழக அரசியல் மாற்றங்களை நாடறியும். இந்நிலையில் திடீரென தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக இன்று அறிக்கை விட்ட கமல்ஹாசன் '' விஜய் தலைமையிலான த.வெ.க 108 இடங்களில் வென்று உள்ள நிலையில், அவரை ஆட்சி அமைக்க அழைக்காமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களின் ஆணையை அவமதிப்பதாகும். தேர்ந்தெடுக்கப்பட்ட 233 உறுப்பினர்கள் இன்னும் பதவியேற்க முடியாமல் இருப்பது மாநிலத்திற்கு நேரும் அவமானம். பெரும்பான்மையை சட்டமன்றத்தில் தான் நிரூபிக்க வேண்டும், ராஜ் பவனில் அல்ல என எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவாக சொல்லியிருக்கிறது. அரசியலமைப்பு பொறுப்பில் இருப்பவர்கள் தங்கள் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
திமுக கூட்டணியில் இருந்து கொண்டு தவெகவுக்கு கமல் எப்படி ஆதரவு கொடுக்கிறார் என தெரியாமல் பலர் கேள்வி எழுப்புகிறார்கள். மேலும், தேர்தல் முடிவுகள் வந்த நிலையில், திமுக தலைவரை கூட்டணி கட்சியினர், ரஜினி உட்பட பலர் சந்தித்துவிட்டனர். கமல்ஹாசன் மட்டும் சந்திக்கவில்லை. ஏன் என்று விசாரித்தால் சட்டசபை தேர்தல் முடிந்த கையுடன் அவர் அமெரிக்கா கிளம்பிவிட்டார்.
சினிமாவில் நடித்து அவர் பல மாதங்கள் ஆகிவிட்டதால், அதில் நடிக்க ஆர்வம் காண்பிக்கிறார். ரஜினி, கமல் இணையும் படத்தை நெல்சன் இயக்குகிறார். அதில் தனது கெட்அப், மேக்கப் விஷயமாக பர்சேஸ் செய்ய, சில விஷயங்கை பற்றி விசாரிக்க அமெரிக்கா சென்றுவிட்டார். அதனால் தான் இந்த அறிக்கைகள் என்கிறார்கள். அதேசமயம் திமுக கூட்டணி கொடுக்கிற சீட்டை அவர் வாங்கியிருந்தால் ஒருவேளை மநீம கட்சிக்கு சீட் கிடைத்து இருக்கும். தவெக அலையில் கிடைக்காமலும் போய் இருக்கும். ஆனால், போட்டியிடாத காரணத்தால் அவருக்கு டென்சன் இல்லை என்றும் கூறப்படுகிறது.