உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : ஜெமினி சிறுவர்கள் யார் தெரியுமா?

பிளாஷ்பேக் : ஜெமினி சிறுவர்கள் யார் தெரியுமா?

அந்தக் காலத்தில் தயாரிப்பு நிறுவனங்கள்தான் சினிமாவை ஆட்சி செய்தது. படம் எந்த ஸ்டூடியோவில் தயாரானது என்பது அன்றைக்கு முக்கியமான தகவல். ஏவிஎம், மாடர்ன் தியேட்டர்ஸ், விஜயா வாஹினி, ஜெமினி ஸ்டூடியோ போன்றவை முக்கியமானவை. ஒவ்வொரு நிறுவனத்தின் லோகோவும் மக்கள் மனதில் ஆழமாக பதிந்திருந்தது. அவற்றில் முக்கியமானது ஜெமினி ஸ்டூடியோவின் லோகோ. இதில் இரண்டு சிறுவர்கள் அரை நிர்வாணத்தில் நின்றபடி குழல் ஊதிக் கொண்டிருப்பார்கள்.

இந்த சிறுவர்கள் யார் என்பது ஒரு சுவையான தகவல். தமிழ் சினிமாவின் முதல் நட்சத்திர இயக்குனர் கே.சுப்ரமணியம். இவர் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன கம்பெனி என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். தற்போது அடையாறில் எம்ஜிஆர் ஜானகி கல்லூரி இருக்கும் இடத்தில் இந்த நிறுவனம் செயல்பட்டு வந்தது. பின்னர் இந்த ஸ்டூடியோவை கே.சுப்ரமணியம் எஸ்.எஸ்.வாசனுக்கு விற்றார். இந்த விற்பனை சம்பந்தமான பேச்சுவார்த்தை நடந்தபோது எஸ்.எஸ்.வாசன் அடிக்கடி அங்கு வந்தார். அப்படி ஒரு நாள் வரும்போது அங்கிருந்த புகைப்படம் ஒன்று அவரை கவர்ந்தது.

கே.சுப்ரமணியத்தின் மகன் திவ்யா குமாரும், மற்றொரு உறவுக்கார சிறுவனும் கோவணம் மட்டும் அணிந்து உடல் முழுக்க எண்ணை தேய்த்துக் கொண்டு காகிதத்தில் செய்யப்பட்ட பீபீயை வாசித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். வெள்ளை மனம் கொண்ட பிள்ளைகளின் விளையாட்டை அவர் ரசித்தார். தன்னிடம் இருந்த கேமராவில் அதை படமாகவும் எடுத்து வைத்துக் கொண்டார் கே சுப்ரமணியம். அதனை கேட்டு வாங்கி ஜெமினி ஸ்டூடியோவின் லோகோவாக வைத்துக் கொண்டார் எஸ்.எஸ்.வாசன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !