நடுவுல நான் எதுக்கு அகர்பத்தி மாதிரி... : சிரஞ்சீவி தமாஷ்
நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் அவர் நடிக்கும் 158வது படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இயக்குனர் பாபி கொல்லி இதை இயக்குகிறார்.. இந்த விழாவில் சிரஞ்சீவியின் தம்பியும் ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் மற்றும் தெலுங்கு திரையுலகின் பிரபல தயாரிப்பாளரான பந்த்லா கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர் பந்த்லா கணேஷைப் பொறுத்தவரை அவர் பவன் கல்யாணின் தீவிரமான ரசிகர் என்பதைவிட பக்தர் என்றே சொல்லலாம். பவன் கல்யாணை அவர் கடவுள் என்றே குறிப்பிடுவார். அந்த வகையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த நிகழ்வில் இருவரும் சந்தித்து கொண்டனர்.
இவர்கள் இருவரிடமும் சேர்ந்து சிரஞ்சீவி புகைப்படம் எடுத்துக் கொள்ள தயாரான போது, பந்த்லா கணேஷின் சீரியஸான பாவனையையும் பவன் கல்யாணின் சிரிப்பையும் பார்த்த சிரஞ்சீவி, ஏம்ப்பா இங்கே கடவுளும் அவரோட பக்தனும் நிக்கிறீங்க, உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல நான் எதுக்கு அம்பிகா அகர்பத்தி மாதிரி நிக்கணும்? நான் ஓரமா போகிறேன், நீங்க ரெண்டு பேரும் நல்லா போட்டோ எடுத்துட்டு வாங்க என்று தமாஷாக கூறினார். அதைக் கேட்டு அங்கிருந்த அனைவரும் வாய்விட்டு சிரித்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.