உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விவகாரத்தில் உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விவகாரத்தில் உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

கடந்த 2017ல் பிரபல மலையாள நடிகை ஒருவர் படப்பிடிப்பு முடிந்து திரும்பும்போது காரில் கடத்தப்பட்டு பாலியல் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டார். அந்த காட்சிகள் ஒரு கேமராவில் படம் பிடிக்கப்பட்டன. இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதியப்பட்டு நீண்ட நாட்களாக நடந்து வந்து நிலையில் சமீபத்தில் தான் இதில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்பட்டது. இதில் சந்தேகத்திற்குரிய குற்றவாளியாக கருதப்பட்டு கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்த நடிகர் திலீப் மீது குற்றமில்லை என கூறி அவர் விடுவிக்கப்பட்டார்..

அதே சமயம் பாதிக்கப்பட்ட நடிகை இந்த வழக்கு குறித்த விசாரணை திருப்திகரமாக இல்லை என்றும், இந்த வழக்கின் முக்கிய ஆவணமான மெமரி கார்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அங்கிருந்த நீதிமன்ற அதிகாரிகள் சிலரால் சட்ட விரோதமாக திறந்து பார்க்கப்பட்டது என்றும், ஒருவேளை அந்த மெமரி கார்டில் இடம் பெற்றிருந்த காட்சிகள் நகல் எடுக்கப்பட்டதா அல்லது யாருக்காவது பகிரப்பட்டதா என்பது குறித்து சிறப்பு புலனாய்வு குழு மூலம் உயர்நீதிமன்ற மேற்பார்வையில் முறையான அறிவியல் ரீதியான புதிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறியிருந்தார்

இந்த நிலையில் இந்த மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், சம்பந்தப்பட்ட குற்றக்காட்சிகள் அடங்கிய அந்த மெமரி கார்டு மற்றும் பென்டிரைவ் ஆகியவற்றை உடனடியாக எர்ணாகுளம் மாவட்ட அமர்வு நீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் பதிவுத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.. மேலும் இந்த மனு தொடர்பாக ஒரு மாத காலத்திற்குள் தங்களது பதிலை தாக்கல் செய்யுமாறு கேரள அரசு மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !