ஸ்பிரிட் : தீபிகா படுகோனே விலகியது ஏன்?
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் தற்போது நடித்து வரும் படம் 'ஸ்பிரிட்'. இப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதிலிருந்து திடீரென விலகினார் தீபிகா படுகோனே. இயக்குனர் வங்காவுக்கும், தீபிகாவுக்கும் இடையில் முரண் ஏற்பட்டதால் விலகினார் என்று அப்போது காரணம் சொன்னார்கள்.
மேலும், படப்பிடிப்பில் இத்தனை மணிக்குத்தான் வருவேன், இத்தனை மணிக்கு கிளம்பிவிடுவேன் என தீபிகா தரப்பில கறாராக சொன்னதாகவும் ஒரு தகவல்.
இந்நிலையில் வங்காவின் சகோதரரும், 'ஸ்பிரிட்' படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவருமான பிரனய் ரெட்டி வங்கா இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ளார்.
இப்படத்திற்காக சுமார் ஒரு வருட காலம் தீபிகா அவரது நேரத்தை செலவழித்தார். படத்தின் கதை, கதாபாத்திரம் அவருக்கு மிகவும் பிடித்துப் போனது. படம் குறித்து இயக்குனரும், தீபிகாவும் பல முறை ஆலோசித்துள்ளார்கள்.
ஆனால், படத்தின் வியாபாரம் மற்றும் படப்பிடிப்பு குறித்த பேச்சுவார்த்தையின் போது முரண் ஏற்பட்டது. இப்படத்தின் லாபத்திலிருந்து தனக்கு 10 சதவீத பங்கு வேண்டுமென தீபிகா குழு கேட்டது. படப்பிடிப்பு நேரம் குறித்தும் பிரச்சனை வந்தது. இதனால்தான் தீபிகா படத்திலிருந்து விலகியதாக தெரிவித்துள்ளார்.