பிளாஷ்பேக் : 5 கதைகளுடன் வெளியான ஐயப்பன் படம்
முன்பெல்லாம் ஆண்டுக்கு ஒரு ஐயப்பன் படமாவது வெளியாகும். தொலைக்காட்சிகளின் வருகைக்கு பிறகு இது நின்று விட்டது. தற்போது ரவிதேஜா நடிப்பில் வெளியாகி உள்ள 'இருமுடிகட்டு' என்ற படம் அய்யப்பன் கணக்கை மீண்டும் துவக்கி வைத்துள்ளது. இதற்கு முன்பு 'சன்னிதானம் போஸ்ட்' என்ற யோகி பாபு படம் வெளியானது அது தோல்வியை தழுவியதால் பரவலான வரவேற்பை பெறவில்லை. தற்போது மோகன்லால் 'அதிமனோகரம்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
1990ம் ஆண்டு வெளியான ‛எங்கள் சாமி ஐய்யப்பன்' படத்தை தசரதன் என்பவர் இயக்கி நடித்திருந்தார். பார்த்திபன், ஆனந்த் பாபு, திலீப், மலேசியா வாசுதேவன், மாதுரி, சிந்து, கோகிலா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, ஆகியோர் சபரிமலை சென்ற வீடியோக்கள் இடம் பெற்றிருந்துது. அதோடு இந்த படத்தில் ஐயப்பன் மகிமையை சொல்லும் 5 கதைகள் இடம் பெற்றிருந்தது.
கதை 1: ஐயப்ப பக்தரான ராஜசுவாமி (ஹரிராஜ்) தனக்கு வேலை கிடைத்தால் சபரிமலைக்கு வருவதாக ஐய்யப்பனிடம் வேண்டுகிறார். அவருக்கு வாகன ஓட்டுநராக வேலை கிடைக்கிறது. அவரது முதலாளி மலேசியா வாசுதேவன், ராஜசுவாமி ஏழை என்பதால் அவரை அடிக்கடி அவமானப்படுத்துகிறார். ராஜசுவாமியும் அவரது முதலாளியும் ஒரே நாளில் பூஜைக்கு ஏற்பாடு செய்கின்றனர். முதலாளி வீட்டுக்கு மாறுவேடத்தில் சிறுவனாக வரும் ஐயப்பனை விரட்டிவிடுகிறார். அங்கிருந்து ராஜசுவாமி வீட்டுக்கு வரும் சிறுவனை வரவேற்று உபசரிகிறார் ராஜசுவாமி. ஐயப்பனின் மனம் மகிழ்ந்து ராஜசுவாமிக்கு அருள்புரிகிறார். அவரது முதலாளியை மன்னிக்கிறார்.
கதை 2: ஆனந்த் பாபு சபரிமலைக்கு செல்லும் வழியில் அவருடைய உடைமைகள் திருடுபோகிறது. ஐயப்பனை மனமுருகி வேண்ட அவரின் உடைமைகள் ஒரு யானையின் மூலம் திரும்பக் கிடைக்கிறது.
கதை 3: திலீப் ஐயப்பனுக்கு விரதமிருந்து மாலை அணிவதால் சைவ உணவுமுறையைப் பின்பற்றுகிறார். அவரது வீட்டுக்கு அருகில் இருக்கும் சரசு அசைவ உணவை சமைத்து பாஸ்கருக்கு இடையூறு தருகிறார். ஐயப்பன் சரசுக்கு தகுந்த பாடம் கற்பிக்கிறார்.
கதை 4: பிரசாந்த் சுவாமியின் மனைவி கவுரி கோகிலா மற்றும் மகள் சவுமியா ஆகியோர் ஒரு கொலை வழக்கில் சாட்சி கூறி குற்றவாளியை சிறைக்கு அனுப்புகிறார்கள். குற்றவாளியின் நண்பர்கள் அவனது மகளைக் கடத்த திட்டமிடுகின்றனர். பிரசாந்த்சாமியின் கனவில் வந்து எச்சரிக்கும் ஐயப்பன் அவரையும் அவர் மகளையும் சபரிமலைக்கு வரச் சொல்கிறார். சபரிமலையில் தொலைந்துபோகும் சவுமியாவை சலீம் பாய் (நாகேஷ்) பத்திரமாக தன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். சவுமியாவைத் தேடிவரும் எதிரிகள் அங்கு வந்து சவுமியாவையும் சலீம்பாயின் பேரனையும் அடித்து விடுகின்றனர். படுகாயமுற்ற இருவரையும் மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். அங்குவரும் ஒரு கிறித்தவர் ரத்ததானம் செய்து அவர்களைக் காப்பாற்றுகிறார்.
கதை 5 : பார்த்திபன் சபரிமலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்புகிறார். அவருடைய தந்தை இரண்டாவதாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு வாசுவையும் அவன் தாயையும் வீட்டைவிட்டு விரட்டுகிறார். வீட்டை விட்டு வெளியேறிய வாசுவை ஒருநாள் காவல்துறை கைது செய்கிறது. அவனது அப்பாவைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. ஐயப்பன் அருளால் உண்மையான குற்றவாளி கண்டுபிடிக்கப்பட வாசு விடுதலையாகிறார்.
பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்தும், 5 கதைகள் இருந்தும் படம் போதிய வரவேற்பை பெறவில்லை.