ஹிந்தி தெரிந்தால் சினிமா வாய்ப்புகள் வரும் : வர்ஷினி
சமீபத்தில் வெளியான 'மொத ராத்திரி' படத்தில் நாயகி அனிஷ்மாவின் தங்கையாக நடித்திருந்தவர் வர்ஷினி கார்மேகம். குறும்படங்கள் மற்றும் மேடை நாடகங்களில் நடித்தவர் இந்த படத்தின் மூலம் சினிமா நடிகை ஆகியிருக்கிறார்.
முறைப்படி பரநாட்டியம் கற்றவர், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகள் கற்றுள்ளார். தனது சினிமா அறிமுகம் குறித்து அவர் கூறும்போது “ஹிந்தி தெரிந்திருப்பது ஒரு கலைஞருக்கு இன்னும் பல்வேறு வாய்ப்புகளை கொடுக்கும். குறிப்பாக, ஓடிடி தளங்கள் வளர்ந்து வரும் இந்த காலத்தில் ஒரே மொழிக்குள்ளேயே சுருங்கி விடாமல், பல்வேறு கதாபாத்திரங்களையும் வாய்ப்புகளையும் தேடிச் செல்ல இது உதவுகிறது. ஹிந்தி மொழியை நன்றாகப் படிக்கவும், சரியாக உச்சரிக்கவும் என்னால் முடியும், இது ஒரு கலைஞராக தனக்கு இன்னும் அதிக வாய்ப்புகளைத் திறக்கும் .
கேமராவுக்காக வெறுமனே நடிப்பதைத் தாண்டி, கதாபாத்திரங்களை தங்கள் திறமையான நடிப்பு மூலம் உயிர்ப்பிக்கும் தபு, ரேகா, ஐஸ்வர்யா ராய் மற்றும் ஷோபனா போன்ற நடிகைகள் எனக்கு முன்மாதிரியானவர்கள். தற்கால நடிகர்களில் சாய் பல்லவியின் இயல்பான நடிப்பும், நடிகர் தனுஷின் பன்முகத்தன்மை மற்றும் கதாபாத்திரத்திற்காக தன்னை முழுமையாக மாற்றிக்கொள்ளும் திறனும் தனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்'' என்கிறார்