உள்ளூர் செய்திகள்

/ சினிமா / விமர்சனம் / மனிதன் தெய்வமாகலாம்

மனிதன் தெய்வமாகலாம்

தயாரிப்பு : விஜயா சதீஷ்
இயக்கம் : டென்னிஸ் மஞ்சுநாத்
நடிப்பு : செல்வராகவன், குஷி ரவி, கவுசல்யா, மைம் கோபி, ஆர்.எஸ்.சதீஷ்
ஒளிப்பதிவு : ரவிவர்மா குமார்
இசை : ஏ.ஆர்.ப்ரியன்
வெளியான தேதி : ஏப்ரல். 10, 2026
நேரம் : 2 மணிநேரம் 05 நிமிடம்
ரேட்டிங்: 2 / 5

இந்தியா சுதந்திரமடைந்து கிட்டத்தட்ட 80 ஆண்டுகள் ஆன நிலையிலும், இன்னும் சில கிராமங்களில் முறையான சாலை வசதிகள் இல்லை. அதனால், பாதிக்கப்படும் மக்களின் கதை. கந்துவட்டிக் கொடுமையால் சிக்கி தவித்து தங்கள் மானத்தை, உயிரை இழக்கும் அப்பாவி பெண்களின் கதை. இந்த இரண்டையும் இணைத்து மனிதன் தெய்வமாகலாம் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத்.

நுங்கு வியாபாரம் செய்யும் செல்வராகவன், ஒரு கட்டத்தில் சொந்தமாக தாபா ஆரம்பிக்கிறார். குஷி ரவியை திருமணம் செய்கிறார். சந்தோஷமாக செல்லும் அவர் வாழ்க்கையில் அடுத்தடுத்து சோகங்கள் நடக்கிறது. அவருக்கு தெரிந்த ஒரு பெண் இறக்கிறார். ஒரு பள்ளி சிறுமியும் இறக்கிறார். ஒரு கட்டத்தில் அவர் அன்பு மனைவியும் தற்கொலை செய்ய, செல்வராகவனுக்கு சில உண்மைகள் தெரிய வருகிறது. அந்த கோபத்தில் அவர் என்ன செய்கிறார். மனிதனான அவர் எப்படி தெய்வநிலைக்கு மாறுகிறார் என்ற கோணத்தில் 1980, 90 கால கட்ட படம் மாதிரி எடுத்திருக்கிறார் இயக்குனர்.

இயக்குனர் செல்வராகவன் இதில் கதைநாயகன். அதிக உணர்ச்சிகள் காண்பிக்காமல், ரொம்ப இயல்பான வசனங்கள் பேசி, சாதாரணமாக நடித்து இருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் ஹீரோயின் குஷி ரவி நடிப்பில் பாதியை கூட அவர் வெளிப்படுத்தவில்லை. எப்போதும் சோகமாக இருக்கிறார். டயலாக் டெலிவரியில்அழுத்தம் இல்லை. முக்கியமான காட்சிகளில் கூட ஸ்கோர் பண்ண மறுக்கிறார். கிளைமாக்சில் ஒரு இடத்தில் கொதித்து எழுகிறார். அந்த இடத்திலும் அவர் நடிப்பும் கொஞ்சம் சினிமாதனம். பல வெற்றி படங்களை கொடுத்த, பல நடிகர்களை சிறப்பாக நடிக்க வைத்த இயக்குனர் செல்வராகவன் இப்படி நடித்தது ஏனோ?. அவர் மனைவியாக வரும் புதுமுக குஷி ரவி ஆரம்பம் முதல் கடைசிவரை சிறப்பாக நடித்து இருக்கிறார். செல்வராகவனுடனான பாசக்காட்சிகள், கடைசியில் கந்து வட்டிக்கு எதிராக பொங்கும் காட்சிகளில் கலக்கியிருக்கிறார். அவர் முகமும், டான்சும் பிரஷ்.

நீண்ட இடைவெளிக்குபின் குணசித்திர நடிகையாக, செல்வராகவன் அக்காவாக வந்திருக்கிறார் சொல்லாமலே கவுசல்யா. ஆனால், அவருக்கான காட்சிகள் குறைவு. ஒரு முக்கியமான எமோஷன் காட்சியில் மட்டும் கலக்கியிருக்கிறார். அவர் முகத்தை டல் ஆக்கி, ஆளையே மாற்றியிருக்கிறார் இயக்குனர். அவர் கணவராக வரும் ஆர்.எஸ்.சதீஷ் நடிப்பு ஓகே. இவர்களை தவிர, எம்எல்ஏவாக வரும் ஒய்.ஜி.மகேந்திரன் நடிப்பில் அவ்வளவு செயற்கைதனம். வட்டி தொழில் செய்பவராக, வில்லனாக வரும் மைம் கோபி மனதில் நிற்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு வட்டிக்கு பணம் கொடுத்து பாலியல் வீடியோ சர்ச்சையில் சிக்கிய ஒரு பைனான்சியரின் பிரபதிபலிப்பாக அவர் கேரக்டர் இருக்கிறது. அதை அவரும் சிறப்பாக செய்து வெறுப்பை சம்பாதித்து இருக்கிறார். ரோடு போட சொல்லி மனு கொடுத்து, அவமானங்களை சந்திக்கும் அந்த தாத்தா கேரக்டரும், செல்வராகவன் மீது பாசமாக இருக்கும் அந்த துறுதுறு சிறுமி கேரக்டரும் மனதில் நிற்கிறது.

கிராமத்துக்கு சாலை வசதியில்லை. அதனால் பாதிப்புகள் என்ற கருவும், சாலையில்லாததால் ஏற்படும் பாதிப்புகளை காட்டி வகையிலும் இயக்குனர் டென்னீஸ் மஞ்சுநாத் சமூக அக்கறை பாராட்டப்படகூடியது. என்ன, இந்த காட்சிகளை இன்னும் அழுத்தமாக எடுத்து இருக்கலாம். அதேபோல், கந்துவட்டிக் கொடுமை, அதனால் பாதிக்கப்படும் பெண்கள் குறித்து சொன்னதும் மனதை பிசைகிறது. ஆனால், அதற்காக அவர் சொல்லும் தீர்வு, கோபம் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை. அந்த கிளைமாக்ஸ் காட்சிகளில் வன்முறை அதிகம்.

ஆரம்பம் முதல் கடைசி வரை திரைக்கதையில் விறுவிறுப்பு இல்லை. ரொம்பவே மெதுவாக நகர்வதும், நாடகத்தனம் மிகுந்த காட்சிகளும் சலிப்பை ஏற்படுத்துகின்றன. ரவி வர்மா ஒளிப்பதிவு ஓகே. பாடல்களில், பின்னணியில் ப்ரியன் இசையும் ஓகே. அடுத்தடுத்த மரணங்கள், சண்டை, கொலை இதெல்லாம் பெண்களை ஈர்க்க வேண்டிய படத்துக்கு பெரிய பலவீனமாகிவிடுகிறது.

தனிப்பட்ட முறையில் சிலரால் பாதிக்கப்படும் மனிதன் கோபப்படுவதும், உணர்ச்சிவசப்பட்டு சில வன்முறை செயல்களை செய்வதும் நடப்பதுதான். அதனால், அவன் தெய்வமாகலாம் என்று தவறான கருத்தை எப்படி ஏற்க முடியும்? இதெல்லாம் தெய்வநிலையா என்ற கேள்வியும் படத்தை மைனஸ் ஆக்கிவிடுகிறது.

மனிதன் தெய்வமாகலாம் - யப்பா, முடியலை சாமி



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !