குருவாயூர் கேசவன் சிலை தந்தங்கள் வெற்றிகரமாக மறுசீரமைப்பு
பாலக்காடு: குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவில் கிழக்கு நுழைவாயிலில் அமைந்துள்ள புகழ்பெற்ற குருவாயூர் கேசவன் யானை சிலையின் தந்தங்கள், 50 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றிகரமாக மீண்டும் பொருத்தப்பட்டு பலப்படுத்தப்பட்டுள்ளன.
கேரளாவின் பிரசித்தி பெற்ற கோவில் குருவாயூர் கிருஷ்ணர் கோவில். இங்கு கடந்த 1970களில் குருவாயூர் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, கோவில் வளாகத்தில் பல்வேறு மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் ஒரு பகுதியாகவே, குருவாயூர் கோவிலின் ஆன்மீக வரலாற்றில் நீங்கா இடம்பிடித்த குருவாயூர் கேசவன் யானையின் உருவச் சிலை கிழக்கு நுழைவாயிலில் நிறுவப்பட்டது. இச்சிலையின் தந்தங்கள், அப்போதைய பிரபல மரச்சிற்பக் கலைஞர் மறைந்த இளவள்ளி நாராயணன் ஆசாரியால் மிக நுணுக்கமாகச் செதுக்கப்பட்டு பொருத்தப்பட்டவை ஆகும். ஐந்து தசாப்தங்களுக்குப் பிறகு, தளர்ந்துபோன அதே தந்தங்களைச் சீரமைக்கும் பொறுப்பு, நாராயணன் ஆசாரியின் மகனும் பிரபல சிற்பியுமான இளவள்ளி நந்தனிடம் ஒப்படைக்கப்பட்டது. இப்பணியில் சிற்பிகளான நவீன் மற்றும் விஸ்வன் ஆகியோரும் நந்தனுடன் பணியாற்றினர். காலப்போக்கில் தளர்வடைந்திருந்த இந்தத் தந்தங்கள், தற்போது அவற்றின் அசல் கம்பீரத்துடன் மீட்டெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் குருவாயூர் வரலாற்றின் மிக முக்கிய அடையாளங்களுள் ஒன்று மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.