மேட்டுப்பாளையம் குண்டத்து காளியாதேவி கோவிலில் வைகாசி சிறப்பு பூஜை
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அடுத்த ஓடந்துறை ஊராட்சி, ஊமப்பாளையத்தில் குண்டத்து காளியாதேவி கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி மாதம் அமாவாசை முன்னிட்டு, காலை, 6:00 மணிக்கு கோவில் நடை திறந்து, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மதியம், 12:00 மணிக்கு பவானி ஆற்றின் கரையோரம் உள்ள ராஜகணபதி, மாதேஸ்வரன், சிவலிங்கம், கங்காதேவி, முருகன், கால பைரவர், விஷ்ணு, துர்க்கை ஆகிய சுவாமிகளுக்கு, அபிஷேகம், அலங்கார பூஜை செய்யப்பட்டது. பின்பு குண்டத்து காளியாதேவி அம்மனுக்கு, 16 வகை வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து, அலங்காரம் செய்யப்பட்டது. அதன் பின் பூஜை செய்தனர். கோவில் எதிரே உள்ள விநாயகர், காளிதேவி, நவகிரக சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை செய்தனர். பூஜைகளை தலைமை பூசாரி பழனிசாமி, அருள் வாக்கு பூசாரி காளியம்மாள் ஆகியோர் செய்திருந்தனர். பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.