பழநி முருகனை அலங்கரிக்கும் ராக்கால நந்தவன மலர்கள்
பழநி: பழநியில் புனரமைப்பு செய்யப்பட்டுள்ள ராக்கால நந்தவனத்தில் பலவகை வாசனை பூச்செடிகள் நடப்பட்டுள்ளன. முருகன் கோயில் ஆறுகால பூஜைக்கு தேவையான மலர்கள் நந்தவனத்தில் இருந்து வழங்கப்பட உள்ளது.
பழநி முருகன் கோயில் நிர்வாகம் சார்பில் கிரிவீதியில் ஏராளமான மரக்கன்றுகள் நடப் பட்டு உள்ளன.
மரக்கன்றுகளுக்கு தினமும் தண்ணீர் விட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. மலையை சுற்றிலும் பசுமையான சூழலை உருவாக்கி உள்ளனர்.
மேற்கு கிரிவீதியில் பழமையான ராக்கால நந்தவனம் உள்ளது. முன்பு எல்லாம் இந்த நந்தவனத்தில் இருந்து மலர்கள் பறித்து மாலைகளாக்கி நவபாஷாண முருகனுக்கு சூட்டுவர். காலப்போக்கில் ஆக்கிரமிப்பு போன்ற இடையூறு ஏற்பட்டது.
இதனால் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிப்பின்றி ராக்கால நந்தவனம் பாழடைந்து இருந்தது.
பழநி கோயில் நிர்வாகம், அறங்காவலர் குழுவினர் இணைந்து ரூ.52 லட்சம் மதிப்பில் இந்த நந்தவனத்தை புதுப்பித்து உள்ளனர். அங்கு பலவகை வாசனை பூச்செடிகளை நட்டு பராமரித்து வருகின்றனர். இங்கு பூக்கும் மலர்களை ஆறுகால பூஜைக்கு பழநி முருகப்பெருமானுக்கு ஐதீகபடி சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குளிரூட்டிய அறையில் மாலைகள் தொடுப்பு சுப்பிரமணியன், பழநி கோயில் அறங்காவலர் குழு தலைவர்: பழநி முருகன் கோயில் நிர்வாகம் சார்பில் மலையை சுற்றிலும் மீது பசுமை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கவனிப்பாரின்றி இருந்த ராக்கால நந்தவனத்தை இக்காலகட்டத்தில் புதுப்பித்தது பெருமைப்படும் விதமாக உள்ளது.
இங்கு வாசனை பூச்செடிகள் நடப்பட்டு முறையாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதன்மூலம் கிடைக்கும் மலர்களை மாலைகளாக தொடுத்து முருகப்பெருமானுக்கு ஐதீகப்படி வழங்கப்பட உள்ளது.
இதற்கென நந்தவனத்தில் குளிரூட்டப்பட்ட தனி அறை உள்ளது. இங்கு தெய்வீகமான சூழலில் மாலைகள் தொடுக்க ஆட்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பொலிவு மாறாமல் மாலைகள் தொடுத்து கோயிலுக்கு வழங்கப்படும். எதிர்காலத்தில் இந்த மலர்களே பூஜைகளில் பயன்படுத்தப்படும்.
ஆறுகால பூஜைக்கு வழங்க ஏற்பாடு மாரிமுத்து, இணை கமிஷனர், பழநி முருகன் கோயில்: பழநி மேற்கு கிரிவீதியில் 80 சென்ட் பரப்பளவு ராக்கால நந்தவனம் 50 ஆண்டுகளுக்கு மேலாக பாழடைந்து கிடந்தது. அங்கு ரூ.52 லட்சம் மதிப்பில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
நந்தவனத்தில் இருந்த குப்பை, பட்டுப்போன மரங்கள் அகற்றப்பட்டன. பாழடைந்த கிணற்றை துார்வாரி சுத்தம் செய்து தண்ணீர் துாய்மையானதாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஒற்றை நந்தியாவட்டை, அடுக்கு நந்தியாவட்டை, காசு நந்தியாவட்டை, செண்பகப்பூ, மனோரஞ்சித பூ, செம்பருத்தி, பவளமல்லி, பாரிஜாதம், ரோஜா, விரிச்சி பூ, சிவப்பு அரளி, வெள்ளை அரளி என அனைத்துவகை பூச்செடிகளும் நடப்பட்டன.
சில நாட்களுக்கு முன் ஹிந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் நந்தவனத்தை திறந்து வைத்தார். இனிவரும் காலங்களில் பழநி கோயில் ஆறுகால பூஜைக்கும் மலர்கள் நந்தவனத்தில் இருந்து வழங்கப்படும்.