உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மொகரம் பண்டிகை; மத நல்லிணக்க பூக்குண்டம் இறங்கிய நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

மொகரம் பண்டிகை; மத நல்லிணக்க பூக்குண்டம் இறங்கிய நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

சாயல்குடி: சாயல்குடி அருகே பெரியகுளத்தில் ஒவ்வொரு ஆண்டும் மொகரம் பண்டிகை தினத்தில் பக்தர்களால் பூக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.


ராமநாதபுரம் மாவட்டத்தில் சாயல்குடி அருகே பெரியகுளத்தில் ஒவ்வொரு ஆண்டும் மொகரம் பண்டிகை தினத்தில்  பக்தர்கள் பூக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி காலம் காலமாக நடந்து வருகிறது. சாயல்குடி அருகே பெரியகுளத்தில் மாமுநாச்சி அம்மன் தர்கா உள்ளது. நேற்று தர்கா மற்றும் பெரியகுளம் கிராமப் பகுதி முழுவதும் மின்னொளியால் அலங்காரம் செய்யப்பட்டு விழாக்கோலம் கொண்டிருந்தது. மொகரம் 1 அன்று 10 நாட்களுக்கு முன்பாக கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நேற்று முன்தினம் இரவு பிறை கொடி மற்றும் சந்தனக்குட சப்பர ஊர்வலம் நடந்தது. இரவில் நாடகம் நடந்தது. சாயல்குடி, கடலாடி, ஒப்பிலான், மாரியூர், வாலிநோக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான கலந்து கொண்டனர்.


மாமுநாச்சி அம்மன் தர்கா முன்புறம் உள்ள இடத்தில் 12 அடி நீள அகலத்தில் பெரிய அக்னிகுண்டம் வளர்க்கப்பட்டது. குண்டத்தைச் சுற்றிலும் நெருப்பு கங்குகள் பரப்பியவுடன் இன்று அதிகாலை 4:00 மணிக்கு காப்பு கட்டி விரதம் இருந்த நேர்த்திக்கடன் பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கினர். கையில் பச்சை வண்ண பிறைக்கொடியை ஏந்தியவாறு குண்டத்தில் இறங்கினர். அருகில் தலையில் முக்காடு போட்டு அமர்ந்திருந்த வேண்டுதல் கொண்ட பெண்களின் தலையில் தீக்கங்குகளை மண்வெட்டி மூலமாக கொட்டும் நிகழ்ச்சி நடந்தது. மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் ஏராளமான கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !