பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் ஆடி லட்சார்ச்சனை யாகம் நிறைவு
பழநி: பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் ஆடி லட்சார்ச்சனை சிறப்பு யாகம் நடந்தது.
பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோயிலில் (ஜூலை 17 ) ஆடி முதல் நாள் லட்சார்ச்சனை துவங்கியது. பெரியநாயகி அம்மனுக்கு ஆடி மாத வெள்ளிக்கிழமைகளான ஜூலை 17ல் முத்தங்கி அலங்காரம், ஜூலை 24ல் மீனாட்சி அம்மன் அலங்காரம், ஜூலை 31ல் சந்தன காப்பு அலங்காரம், ஆக. 7, விசாலாட்சி அலங்காரம், செய்யப்பட்டது. தினசரி மாலை சிறப்பு அலங்காரம் செய்து மலர்கள் தூவி அர்ச்சனை நடந்தது. தொடர்ந்து நடந்த ஆடி லட்சார்ச்சனை ஆக.10, நிறைவடைந்தது. (ஆக.11,) நேற்று ஆடி லட்சார்ச்சனை நிறைவு யாக பூஜை நடைபெற்றது. முன்னதாக கோயில் யானை கஸ்தூரிக்கு கஜ பூஜை நடந்தது. யாகத்தில் வெள்ளி குடத்தில் புனித நீர் நிரப்பப்பட்டு கலச பூஜை, விநாயகர் பூஜை நடந்தது. யாகத்தில் நூற்றுக்கணக்கான பட்டுப்புடவைகள், தாலி, தங்கம், வெள்ளி ஆபரணங்கள் யாகத்தில் அர்ப்பணம் செய்யப்பட்டது. இதில் சுமங்கலி பூஜை, பிரம்மச்சரிய பூஜை நடந்தது. 108 கலசங்களில் புனித நீர் எடுத்துவரப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. யாகத்தினை அமிர்தலிங்கம் குருக்கள், செல்வசுப்பிரமணியம் குருக்கள் குழுவினர் செய்தனர். ஆக. 14, மகா அபிஷேகம், தங்க கவச அலங்காரம் அம்மனுக்கு நடைபெற உள்ளது. அன்று இரவு வெள்ளி ரதத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற உள்ளது.