திருப்பதியில் வழிபாடு செய்த நயன்தாரா, விக்னேஷ் சிவன்
தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திர தம்பதியினரான நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்று காலை திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.
நயன்தாரா இணைந்து தயாரிக்க, விக்னேஷ் சிவன் இயக்க, பிரதீப் ரங்கநாதன், கிரித்தி ஷெட்டி மற்றும் பலர் நடிக்கும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படம் நாளை வெளியாகிறது. இப்படம் ஏற்கெனவே மூன்று முறை தள்ளிப் போய் தான் நாளை வெளியாக உள்ளது.
அதே போல திங்களன்று நடைபெற வேண்டிய இப்படத்தின் முன் வெளியீட்டு விழா, திடீர் மழை காரணமாக தள்ளி வைக்கப்பட்டு மறுநாள் செவ்வாய் அன்றுதான் நடைபெற்றது. தொடர்ந்து இப்படத்திற்கு தடங்கல்கள் வந்தது.
பொதுவாக தங்களது புதிய படங்கள் வெளியாகும் போது தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள், நடிகைகள் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். அது போல நயன்தாரா, விக்னேஷ் சிவன் இன்று சென்றுள்ளனர். பிறப்பால் கிறிஸ்துவராக இருந்தாலும் பின் இந்து மதத்தைத் தழுவி தொடர்ந்து இந்து கோயில்களுக்கு சென்று வருபவர் நயன்தாரா.