சினிமாவில் சாதிப்பாரா ரேஷ்மா
தமிழ்நாட்டில் வசித்தாலும் ரேஷ்மா முரளிதரனுக்கு பூர்வீகம் கேரளா. பல அழகி போட்டிகளில் டைட்டில் வென்றதன் மூலம் சின்னத்திரைக்கு வந்தார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முதல்முறையாக டான்ஸ் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு 'டான்ஸ் ஜோடி டான்ஸ்' நிகழ்ச்சியில் ஆடினார். அதன்பின் 'பூவே பூச்சூடவா' என்ற சீரியலில் நடித்தார். தனது அழகால் நடிப்பால் ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கினார்.
தொடர்ந்து, கலர்ஸ் தமிழில் சேனலில், 'அபி டெய்லர்' என்ற சீரியலில் நடித்தார். விஜய் டிவியில் 'கிழக்கு வாசல்' என்ற தொடரில் நடித்தார். 'செல்லமே செல்லமே' தொடரின் நாயகி ஆனார். இதன் அடுத்த கட்டமாக திரைப்பட வாய்ப்புகளை தேடினார்.
அதன் பலனாக தற்போது காளிவெங்கட் ஜோடியாகவும், கதை நாயகியாவும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தில் ஜென்சன் திவாகர், 'ஆடுகளம்' நரேன், மைம் கோபி, ஜெயப்பிரகாஷ், விஜே பார்வதி, வினோதினி வைத்தியநாதன், சரத்பாபு நடிக்கின்றனர். தினேஷ் குமார் ஒளிப்பதிவு செய்ய, ஜென் மார்ட்டின் இசை அமைக்கிறார். பா.விஜய் கார்த்திகேயன் எழுதி இயக்குகிறார்.
அரசு பள்ளியில் படிக்கும் தன் மகனை தனியார் பள்ளியில் சேர்க்க போராடும் ஒரு தந்தையின் கதை. தந்தையாக காளி வெங்கட்டும், தாயாக ரேஷ்மாவும் நடிக்கிறார்கள். சின்னத்திரையில் குறுகிய காலத்தில் சாதித்த ரேஷ்மா சினிமாவிலும் சாதிப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.