பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர தயாரிப்பாளர்
சென்னை விஜயா வாஹினி, காரைக்குடி ஏவிஎம், சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனங்கள் திரைப்படத் தயாரிப்பில் கொடி கட்டி பறந்து கொண்டிருந்த காலத்தில் கோவையில் 'சென்ட்ரல் ஸ்டூடியோ'வை தொடங்கி முதல் நட்சத்திர தயாரிப்பாளராக இருந்தவர் எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு. சென்னையில் சினிமா தொடங்குவதற்கு முன்பே கோவையில் தொடங்கியவர். பிற்காலத்தில் சென்ட்ரல் ஸ்டூடியோவில் இருந்து விலகி பக்ஷிராஜா ஸ்டூடியோவை அமைத்தவர்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் சிங்களம் என பல மொழிகளிலும் படங்களை தயாரித்தவர். ஒரு சாதாரண 'பேக்கரி' ஊழியராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர், படிப்படியாக உயர்ந்து, திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குனர், ஸ்டூடியோ உரிமையாளர் எனப் பல பரிமாணங்களில் மிளிர்ந்து, தென்னிந்தியத் திரைப்பட உலகின் முன்னணி ஆளுமைகளில் ஒருவராகவும், மிக உயர்ந்த இடத்தில் வீற்றிருக்கும் ஒரு ஜாம்பவானாகவும் உருவெடுத்தார். திரைக்கதை எழுதுவது முதல் திரைப்படம் திரையில் வெளியாவது வரையிலான அனைத்துத் துறைகளிலும், ஒவ்வொரு கட்டத்திலும் அவர் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார்.
அவர் தயாரித்த முதல் திரைப்படம் ஆர்யமாலா 1941ம் ஆண்டு வெளியானது. சென்ட்ரல் ஸ்டூடியோஸில் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தில், அக்காலத்தின் புகழ்பெற்ற பாடகரும் நடிகருமான பி.யு. சின்னப்பா கதாநாயகனாக நடித்திருந்தார். சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்தப் படத்தின் 'டைட்டில் கார்டுகளிலோ' அல்லது படத்தின் பாடல் புத்தகத்திலோ ஸ்ரீராமுலு நாயுடுவின் பெயர் இயக்குனர் என்றோ அல்லது தயாரிப்பாளர் என்றோ குறிப்பிடப்படவில்லை. இருப்பினும், வசூலில் பெரும் சாதனை படைத்த இந்தப் படத்தின் வெற்றிக்குப் பின்னால் இருந்த உத்வேகமும், அதை முன்னின்று இயக்கிய முக்கிய சக்தியும் அவர்தான்.
எம்.கே. தியாகராஜ பாகவதருடன் இணைந்து, மீண்டும் சென்ட்ரல் ஸ்டுடியோவில், வசூல் சாதனை படைத்த 'சிவகவி' படத்தையும் தயாரித்தார். இவர் தயாரித்த 'மலைக்கள்ளன்' எம்ஜிஆரை நட்சத்திர ஹீரோவாக்கியது. இந்தப் படத்தை தெலுங்கில் 'அக்கி ராமுடு', மலையாளத்தில் 'தஸ்கர வீரன்', கன்னடத்தில் 'பெட்ட கல்லா' மற்றும் ஹிந்தியில் 'ஆசாத்' ஆகிய மொழிகளில் தயாரித்து, இயக்கினார். அனைத்து பதிப்புகளும் பாக்ஸ் ஆபிஸ் வெற்றிகளாக அமைந்தன.
1944ம் ஆண்டு லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இவர் முதல்கட்ட விசாரணையிலேயே விடுதலை செய்யப்பட்டார். என்றாலும் அவர் கைது அவரது வாழ்க்கையை புரட்டிப்போட்டது. கோவையில் கந்தன் ஸ்டூடியோவை லீசுக்கு எடுத்து நடத்தினார். பின்னர் முதுமை காரணமாக சினிமாவிட்டு விலகி, மறைந்தார்.