உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: முதல் படத்தின் பட்ஜெட் 35 ஆயிரம், லாபம் 15 ஆயிரம்

பிளாஷ்பேக்: முதல் படத்தின் பட்ஜெட் 35 ஆயிரம், லாபம் 15 ஆயிரம்

தமிழ் சினிமாவின் தந்தை என்று போற்றப்படும் ஆர்.நடராஜ முதலியார் தயாரித்த படம் 'கீசக வதம்'. தென்னிந்தியாவின் முதன் சினிமா இது. இந்த படத்தை உருவாக்க நடராஜ முதலியார் பட்ட துயரங்கள் பற்றி தனி புத்தகமே எழுதலாம். வெளிநாட்டில் இருந்து பிலிமை வாங்கி சென்னை வெயிலில் அது உருகி விடும் என்று பெங்களூரில் கொண்டு வைத்து தேவைப்படும்போது தேவையான அளவு எடுத்து வந்து பயன்படுத்தினார். மவுன படம் என்பதால் ஏராளமான கதை சொல்லிகளை நியமித்தார். படத்தை இந்தியா முழுக்க வெளியிடுவதற்காக இந்தி மற்றும் ஆங்கிலத்தில் சப் டைட்டில் போட்டார்.

1917ம் ஆண்டு படப்பிடிப்பை தொடங்கி 1918ம் ஆண்டு முடித்தார். சென்னையில் ஆங்கில படங்களை திரையிட்டு வந்த எல்பின்ஸ்டன் தியேட்டரில் திரையிட்டார். இந்த தியேட்டர்தான் பின்னாளில் 'ஸ்பென்சர் பிளாசா' வணிக வளமானது. படம் பெரிய வெற்றி பெற்றது. ஆங்கில பத்திரிகைகளும், ஆங்கிலேயர்களுமே கொண்டாடினார்கள்.

படத்தின் பட்ஜெட் 35 ஆயிரம் ரூபாய். படம் வசூலித்து 50 ஆயிரம் தயாரிப்பாளராக நடராஜ முதலியாருக்கு லாபமாக கிடைத்தது, 15 ஆயிரம். ஆனால் தற்போது இந்த படத்தின் பிரதி இல்லை. நடராஜ முதலியாரின் ஸ்டூடியோவில் நடந்த தீ விபத்தில் பிலிம் சுருள்கள் எரிந்து விட்டதாக கூறுவார்கள்.

நியூயார்க்கில் உள்ள ஈஸ்ட்மேன்பவுண்டேஷன் நிறுவனத்தால் பாதுகாக்கப்படுவதாகவும் சொல்வார்கள். இந்த நிறுவனம்தான் 'கீசகவதம்' படத்திற்கு பிலிம் சப்ளை செய்ததோடு, அதை பிராசசிங் செய்து கொடுத்தது. எந்த படத்திற்கு பிராசஸ் செய்தாலும் அதன் ஒரு காப்பியை இந்த நிறுவனம் வைத்துக் கொள்ளும், அந்த அடிப்படையில் இந்த படமும் அந்த நிறுவனத்திடம் இருக்கலாம் என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !