குடி பழக்கத்தை விட்டு விட்டேன் : ஜான்வி கபூர்
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். பாலிவுட்டில் அறிமுகமாகி தற்போது தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். தனக்கு குடிபழக்கம் இருந்ததாகவும், இப்போது அதை விட்டுவிட்டதாக அவர் கூறியிருக்கிறார்.
நேர்காணல் ஒன்றில் அவர் இதுகுறித்து கூறியிருப்பதாவது: நான் மதுவுக்கு அடிமையாக இருந்தேன் என்றோ அல்லது அதை தவறாக பயன்படுத்தினேன் என்றோ சொல்ல மாட்டேன். எப்போதாவது குடிக்கும் பழக்கம் எனக்கு இருந்தது. என் வாழ்வில் மிகவும் வேதனையான ஒரு அனுபவத்திற்கு பிறகு மது அருந்தும் பழக்கம் ஏற்பட்டது.
இரவில் குடித்து விட்டு காலையில் நான் எழுந்திருக்கும் போது வரும் அந்த தலைவலி எனக்கு ஒரு விதமான சங்கடத்தை ஏற்படுத்தும். என்னிடம் இருந்து வந்த ஒரு குறிப்பிட்ட வாசனையை என்னால் நுகர முடிந்தது. குடிப்பழக்கத்தால் அவதிப்பட்ட ஒருவரிடம் இருந்து எனக்கு வந்த அதே பரிச்சயமான வாசனை. அந்த வாசனை இது ஒரு நல்ல நாள் இல்லை என்பது போன்ற உணர்வை எனக்கு ஏற்படுத்தியது. இதனால் அந்த பழக்கத்தை முற்றிலுமாக விலக்கி விட்டேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.