மீண்டும் அதிகாலை காட்சிகள்… அனுமதி கிடைக்குமா ?
தமிழகத்தில் உள்ள சினிமா தியேட்டர்களில் அதிகாலை காட்சிகள் என்பது முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் முதல் நாளில் நடைபெறும் வழக்கம் இருந்தது. ஆனால், 2023ல் அஜித் நடித்து வெளிவந்த 'துணிவு' படத்தின் அதிகாலை காட்சியின் போது ரசிகர் ஒருவர் லாரி மீதிருந்து தவறி விழுந்து இறந்து போனார். அதன்பின் அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி தருவதை முந்தைய அரசு ரத்து செய்தது.
காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரையிலான காட்சிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் என முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் வெளியான போது கூட எந்தவிதமான அனுமதியையும் தராமல் அதில் கண்டிப்பு காட்டி வந்தார்கள்.
அடுத்து விஜய் தலைமையிலான ஆட்சி அமைய உள்ளது. அவர் பெரும்பான்மை நிரூபித்து ஆட்சியில் அமர்ந்தால் அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துள்ளது. விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' படமும் விரைவில் வெளியாக உள்ளது.
இரவு 11 மணிக்கு ஆரம்பமாகும் காட்சிகள் முடிவடைய அதிகாலை 2 மணி கூட ஆகிவிடுகிறது. அதற்கடுத்து அதிகாலை 5 மணிக்கோ அல்லது 6 மணிக்கோ சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி கொடுத்தால் நன்றாக இருக்கும் என திரையுலகினரும் எதிர்பார்ப்பதாகத் தகவல்.