தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல்
யுடியூபில் பிரபலமாகி தற்போது காமெடி நடிகர் ஆகியிருப்பவர் ஜி.பி.முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அடுத்த பெருமாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர். தன் வீட்டின் அருகே உள்ள நிலத்தில் நடைபெறும் கோயில் கட்டுமான பணியால் தனக்கும், அப்பகுதி மக்களுக்கும் இடையூறு ஏற்படுவதாக ஆட்சியர் அலுவலகத்தில் ஜிபி முத்து அளித்த புகாரில் கட்டுமான பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் உடன்குடியை சேர்ந்த சுடலையாண்டி என்ற நகை தொழிலாளி, தனது மகளையும், அண்ணன் மகளையும் டியூசன் சென்டருக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்துத் சென்றார். அப்போது ஜி.பி.முத்து வீட்டு முன்பு வளர்க்கப்படும் முள்செடி சுடலையாண்டி மகளின் இடது கண்பகுதியில் குத்திக்காயம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டுட்டு, அந்த முள்செடிகளை அகற்றியுள்ளார்.
மறுநாள் சுடலையாண்டி அந்தப்பகுதிக்கு சென்றபோது, ஜி.பி.முத்து, அவரது மனைவி அஜிதா, சகோதரர் மனைவி அனிதா, தந்தை கணேசன் ஆகியோர் இதுபற்றி கேட்டபோது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் தாக்கியதில் பலருக்கு காயம் ஏற்பட்டது. இது குறித்து ஜி.பி.முத்து உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து முத்து வெளியிட்டுள்ள வீடியோவில், “எனது இடத்தில் கோவில் பணிகள் செய்கிறார்கள். நான் சட்டப்படி நீதிமன்றம் சென்றுள்ளேன். இதனால் நான் இந்து விரோதி என்றும், இஸ்லாமிய கைக்கூலி என்றும் கூறி தொடர்ந்து என்மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். தற்போது நடந்த பிரச்சினையில் என்னை தாக்கியதாடு என் மகளின் ஜாக்கெட்டை கிழித்தும், கம்பியால் தாக்கவும் செய்தனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.