உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / போலீஸ் ஸ்டேஷனில் எங்களை மிரட்டி எழுதி வாங்கினார்கள் : திரிஷ்யம் நடிகை குற்றச்சாட்டு.

போலீஸ் ஸ்டேஷனில் எங்களை மிரட்டி எழுதி வாங்கினார்கள் : திரிஷ்யம் நடிகை குற்றச்சாட்டு.

மோகன்லால் நடிப்பில் வெளியான திரிஷ்யம் படத்தின் மூன்று பாகங்களிலும் அவரது மூத்த மகளாக நடித்தவர் நடிகை அன்சிபா ஹாசன். கடந்த வருடம் நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியின்றி இணைச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், சமீபத்தில் அந்தப் பதவியை ராஜினாமா செய்தார். நடிகர் சங்கத்தில் தனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகப் பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இது ஒரு பக்கம் இருக்க, தற்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனது குடும்பத்துடன் கொச்சியில் உள்ள ஒரு உணவகத்திற்குச் சென்றிருந்தோம். அப்போது அங்கு கார் பார்க்கிங் பகுதியில் எனது சகோதரருக்கும் இன்னொரு நபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதனைத் தொடர்ந்து எர்ணாகுளம் வடக்கு காவல் நிலையத்திற்குச் சென்றோம். அப்போது அந்த இன்னொரு நபருக்கு ஆதரவளிக்கும் விதமாக போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த உள்ளூர் அரசியல்வாதி மற்றும் அவருடன் வந்தவர்கள் ஒருவர் எஸ்.ஐ முன்னிலையில் எங்களது குடும்பத்தாரையும் மிக மோசமான வார்த்தைகளால் திட்டி மிரட்டினார்கள்.

பிறகு என் சகோதரரைக் கட்டாயப்படுத்தி மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கினார்கள் போலீசார். அதன் பிறகு அந்த கடிதத்தின் கீழே 'நாங்கள் அன்சிபாவின் பிரபலத்தைப் பயன்படுத்தி அந்த நபரை மிரட்டினோம்' என்று கூடுதலாக வரிகளை எங்களுக்குத் தெரியாமலேயே சேர்த்துக் கொண்டனர். ஒரு பெண்ணான எனக்கு அங்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை என்பது போல உணர்ந்தேன். இது குறித்து கொச்சி நகர போலீஸ் கமிஷனரிடமும் புகார் அளித்துள்ளோம்” என்று கூறியுள்ளார் அன்சிபா..

ஒரு பிரபல நடிகைக்கே காவல் நிலையத்தில் பாதுகாப்பு இல்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளது தற்போது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !