பிளாஷ்பேக் : மலையாள சினிமா கொண்டாடும் பிரேம் நசீரின் கைவிலங்கு
மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருந்தவர் பிரேம் நசீர். 600க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்து உலக சாதனை படைத்தவர். ஒரு காலத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவர் படம் வந்தது. அவரைச் சுற்றித்தான் மலையாள சினிமா இயங்கியது. ஒரு நாளில் 16 மணிநேரம், மூன்று ஷிப்டுகளில் நடித்தார். ஆனாலும் அவர் மிகச்சிறந்த மனிதாபிமானியாக இருந்தார். தன்னால் ஒரு தயாரிப்பாளர் நஷ்டம் அடைந்தால் அந்த தயாரிப்பாளருக்கு அடுத்த படத்தை சம்பளம் வாங்காமல் நடித்து கொடுப்பார்.
அவரது மனிதாபிமானத்திற்கு உதாரணமாக மலையாள திரையுலகம் இப்போதும் ஒரு சம்பவத்தை சொல்லி மகிழும்...
ஒரு நாள் அதிகாலையில் இருந்து முதல் ஷிப்டாக ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அடுத்து அவர் இரண்டு படப்பிடிப்புகளுக்கு செல்ல வேண்டும். முதல் படத்தில் போலீஸ் அவரை கைது செய்வது போன்று ஒரு காட்சி படமானது. இதுபோன்ற காட்சிகளில் நிஜமான கைவிலங்கை பயன்படுத்துவார்கள்.
கைவிலங்கு போட்டு நசீர் சம்பந்தமான காட்சிகளை எடுக்கிறார்கள். காட்சி முடிந்ததும் கைவிலங்கை கழற்ற வேண்டும். ஆனால் அந்த கைவிலங்கின் சாவி எங்கோ தொலைந்து விட்டது. ஆர்ட் இலாகா ஊழியர்கள் சல்லடை போட்டு தேடியும் சாவி கிடைக்கவில்லை. ரம்பம் வைத்து அறுத்தாலோ, வெல்டிங் செய்தாலோ கையில் காயம் ஏற்படும்.
இந்த சூழ்நிலையிலும் எல்லோரிடமும் மகிழ்ச்சியாக விடைபெற்றார் பிரேம் நசீர். மற்ற இரண்டு படப்பிடிப்புகளையும் ரத்து செய்து விட்டு கைவிலங்குடனேயே நேராக வீட்டுக்கு சென்று விட்டார். ஒரு வழியாக சாவியை கண்டுபிடித்து மாலையில் படப்பிடிப்பு குழுவினர் பிரேம் நசீர் வீட்டுக்கு சென்றனர். வீட்டு ஹாலில் கைவிலங்குடன் அமர்ந்திருந்தார் பிரேம் நசீர் அவரது மனைவி அவருக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தார்.
படக்குழுவினர் என்ன சொல்வது என்று தெரியாமல் பதட்டத்துடன் நின்று கொண்டிருந்தார்கள். கொண்டு வந்த சாவி மூலம் அவர் கைவிலங்கை கழற்றினார்கள். மற்ற ஹீரோக்களாக என்னவெல்லாம் நடந்திருக்கும்.
பிரேம் நசீர் சொன்னார். “தவறு செய்வது மனித இயல்பு. இதனால் எனக்கு மகிழ்ச்சி. இன்று உங்களால் எனக்கு ஒரு நாள் ஓய்வு கிடைத்தது. சாவியை தொலைத்த ஆர்ட் குழுவிற்கு நன்றி. திருமணமான புதிதில் தேனிலவிற்கு சென்றபோது மனைவி எனக்கு சோறு ஊட்டிவிடுவார். அதன்பிறகு செய்வதில்லை. அவரிடம் சோறு ஊட்டவிடச் சொல்ல ஆசை, அதைச் சொல்ல வெட்கம். இன்று உங்களால் அவள் எனக்கு சோறு ஊட்டினாள். இதை செய்ய வைத்த உங்களுக்கு நன்றி. நாளை காலை வழக்கம்போல படப்பிடிப்புக்கு வருகிறேன். எப்போதும் இதுபோன்ற காட்சிகளுக்கு இரண்டு சாவி வைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தார்.