கரோலின் எனும் பாக்கியசாலி
வி .ஜே.,வாக மீடியா வாழ்வை துவங்கி சின்ன சின்ன ரோல்கள், முன்னணி சீரியல்கள், கேரக்டர் ஆர்ட்டிஸ்ட், சினிமா என படிப்படியான வளர்ச்சியை குறுகிய காலத்திலேயே தக்க வைத்தவர் நடிகை கரோலின்.
வித்யா நம்பர் ஒன், சூர்யவம்சம், பிரியமானவள், அயலி, ருத்ரா என சீரியல்கள் மட்டுமல்லாமல் மெர்சல், பசங்க 2, ஒருநாள் கூத்து என பெரிய திரையிலும் கால் பதித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். திறமை, நடிப்பால் சின்னத்திரை ரசிகர்களின் திரைப்பசிக்கு தீனி போடும் இவரிடம் சண்டே ஸ்பெஷலுக்காக பேசினோம்.
அவர் மனம் திறந்து பேசியதிலிருந்து...
நான் சிங்கிள் பேரன்ட் சைல்ட். சராசரியான குடும்பம். சின்ன வயதிலிருந்தே நிறைய கஷ்டங்களை அனுபவிச்சி வளர்ந்தேன். டெய்லரிங் வேலை பார்த்து அம்மா என்னை, தங்கைகளை படிக்க வெச்சாங்க. கல்லுாரி படிப்பு முடிந்ததும் ஐ.டி., கம்பெனியில் வேலை கிடைச்சது. என்னோடு வேலை பார்க்குற சில பேரு பார்ட் டைமாக டி.வி., ேஷா, சினிமாக்களில் சப்போர்ட்டிங் ரோல்களிலும் நடிப்பது வாடிக்கை.
அந்த வகையில் டி.வி.,யில் பார்ட் டைம் வி.ஜே., வேலை எனக்கு கிடைச்சது. சின்ன வயதிலிருந்தே ஸ்டேஜ், ஹோஸ்டிங் எல்லாம் ப்ராக்டீஸ் இருந்ததால் வி.ஜே.,வேலை எனக்கு சீக்கிரமா பொருந்தி போச்சு. கொஞ்ச, கொஞ்சமாக பிரபலமாகி சீரியல்களில் நடிக்க ஆரம்பிச்சேன். ஒருகட்டத்தில் ஐ.டி., வேலையை ராஜினாமா செய்துட்டு முழுநேரமாக நடிக்க வந்துட்டேன்.
என்னோடது காதல் திருமணம். கணவர் மேக்கப் ஆர்ட்டிஸ்ட். சீரியல், நடிப்பு, குடும்பம் என வாழ்க்கை நல்லா போயிட்டு இருந்தது. குழந்தை பிரசவமான ஐந்து மாதத்தில் திடீரென எனக்கு வலிப்பு வந்தது. அதில் ஏற்பட்ட உடல் நலக்குறைவால் பக்கத்தில் இருப்பவர்கள், பசிக்கு அழுத குழந்தை, பாசத்தில் தவித்தஉறவுகள் என எதுவும் உணராத ஜடமாய் ஆறு மாதங்கள் கோமாவில் இருந்தேன். தினசரி சிகிச்சைக்கு மட்டும் ரூ.90 ஆயிரம் செலவாச்சு.
இறைவனின் கருணையோ, மருத்துவத்தின் பலனோ நான் கோமாவில் இருந்து மீண்டாலும் பழைய நினைவுகள் திரும்ப வில்லை. அந்த கொடுமையான காலக்கட்டத்தில் பெற்ற குழந்தையை கூட என்னால் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலை என் எதிரிக்கு கூட வரக்கூடாது என இப்போதும் வேண்டுகிறேன்.
கோமாவால் மனதளவில் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து ஓரளவு மீளவே எனக்கு ஓராண்டு ஆனது. அதன்பின் கிடைத்த சீரியல் கேரக்டர்கள், சினிமா ரோல்களில் நடித்து வருகிறேன்.
மீடியாவிற்குள் வந்த பின் கிடைத்த ஒவ்வொரு அனுபவங்களும், சந்தித்த மனிதர்களும் எனது பொக்கிஷமான நினைவுகள். என்னை இந்த பிளாட்பார்மில் வழிநடத்திய சீனியர் ஆர்ட்டிஸ்ட்கள் அனைவரும் எனது குருமார்கள். கஷ்டத்தில் துணை நின்றவர்கள், நலன் விரும்பும் ரசிகர்கள் எல்லாருக்கும் நன்றி. நிலையான முடிவு, நிறைய மன வலிமை, சீரான ஆரோக்கியம், சரியான குடும்பம் கிடைத்துவிட்டால் நம்மைவிட பாக்கியசாலிகள் இல்லை. அந்த வகையில் நான் பாக்கியசாலி என உதடு நிறைய புன்முறுவல் பூத்தவருக்கு நன்றி கூறி விடைபெற்றோம்.