முதல் மரியாதைக்குரியவர்களுக்கு இறுதி மரியாதை
பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டு, பாரதிராஜாவால் அழுத்தமான அடையாளம் பெற்றவர்கள் ரஜினியும், கமலும். அவர்கள் இருவரோடு ஒட்டுமொத்த தமிழ் சினிமா கலைஞர்களும் பல பிரபல அரசியல்வாதிகளும் கலந்துகொள்ள 12 மணிநேர நெகிழ்வாக நடந்து முடிந்துள்ளது ராஜகோபுரங்கள் நினைவு உற்சவம் நிகழ்ச்சி.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், தென்னிந்திய திரைப்பட இயக்குநர்கள் சங்கம் ஆகிய சங்கங்கள் இணைந்து இந்த விழாவை நடத்தின.
இந்நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள் நடந்தபோது சங்கங்களுக்குள் நடந்த சலசலப்புகளை சபை நாகரிகம் கருதி தவிர்த்துவிடலாம். இதற்கு முன்னர், மரியாதைக்குரிய இயக்குநர் மகேந்திரன், ஒளிப்பதிவாளர் அசோக்குமார் போன்றவர்கள் காலமானபோது மிகவும் சொற்பமானவர்களே கலந்துகொண்ட துயரம் நல்லவேளையாக பாரதிராஜா, பாக்யராஜ் இறுதிப்பயணங்களில் நடக்கவில்லை.
இயக்குனர் இமயம் பாரதிராஜாவும், திரைக்கதை மன்னன் பாக்யராஜும் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அடுத்தடுத்து அமரரானது தமிழ் சினிமாவுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவர்கள் இழப்பின்போது ரசிகர்கள் விட்ட கண்ணீரின் ஈரம் இப்போதும் காயாமல் இருக்கிறது.
இவர்கள் இருவரது சாதனைகளயும் நிச்சயம் கொஞ்சமாக எழுதிச் சென்றுவிட முடியாது. அவை ஆயிரம் பக்கங்களில் எழுதப்பட்டாலும் கூட சொல்லாமல் மிச்சம் விட்ட சேதிகள் இன்னும் பல்லாயிரம் பக்கங்களாக இருக்கும்.
இயக்குனர்களுக்கு முதல் மரியாதை என வாழ்ந்தவர்
ஸ்டுடியோக்களில் புழங்கிக் கொண்டிருந்த சினிமாவை உயிர்ப்பான இடங்களுக்குக் கொண்டு சென்றவர் பாரதிராஜா என்ற பெருமையைத்தான் எப்போதும் முதன்மையாக பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் யாரை வேண்டுமானாலும் நட்சத்திரமாக்குவேன். எவ்வளவு பெரிய நட்சத்திரமானாலும் அவர்கள் பின்னால் போகவே மாட்டேன் என்று தன் வாழ்நாள் முழுக்க சினிமாவில் இயக்குனர்களுக்குத்தான் முதல் மரியாதை என்று வாழ்ந்து காட்டியவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா.
தன் முதல் படத்தை மிக எளிமையான பட்ஜெட்டில் தொடங்கியவர் எவ்வளவோ பெரிய வெற்றிகளைக் கொடுத்த பின்னரும் அதை மாற்றிக் கொள்ளவே இல்லை. அவரது படங்களில் வெடிகுண்டுகளுக்கும், துப்பாக்கிகளுக்கும் எப்போதும் வேலை இல்லை. நடைமுறையில் இல்லாத பிரம்மாண்டங்களும் எப்போதும் அவர் படங்களிலும் இருந்ததில்லை. 16 வயதினிலே தொடங்கி கிராமியப் படங்களாக அடுத்தடுத்து இயக்கிக் கொண்டிருக்க, 'இவருக்கு இது மட்டும் தான் வரும்' என்று விமர்சனங்கள் கிளம்ப 'சிகப்பு ரோஜாக்களால் சிலிர்க்க வைத்தவர்.
எளிய மனிதர்களின் ஆதர்ஷம்
இவரது சிஷ்யர் பாக்யராஜோ எளிய மனிதர்களின் ஆதர்ஷம். ஏழை ஜனங்களின் வாழ்க்கையை அச்சு அசலாக வெள்ளித்திரையில் எழுதியவர். அவரது கதாபாத்திரங்கள் அனைவருமே நமது அண்டை வீட்டுக்காரர்கள். அவரது பல படங்களில், இந்தக் காட்சியில் சிரிப்பதா அழுவதா என்று தெரியாமல் ரசிகர்களை திகைக்க வைத்தவர். பாலிவுட் வரை திரைக்கதைக்கு நான்தான் வத்தியார் என்று பாடம் எடுத்தவர்.
'அந்த 7 நாட்கள்', 'டார்லிங் டார்லிங்', தூறல் நின்னு போச்சு', 'முந்தானை முடிச்சு' என்று தான் இயக்கிய பல படங்கள் மூலம் வெள்ளித்திரையில் தங்கம் விளைவித்தவர். தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற இருவர்.
இப்படியொரு இரு, சிஷ்யன் இருந்ததில்லை
உலக சினிமா வரலாற்றில் இப்படி ஒரு குருவும், சிஷ்யனும் இதுவரை மட்டுமல்ல... இனியும் இருக்கவாய்ப்பில்லை. இதெல்லாம் ஒரு மூஞ்சியா என்று எல்லோரும் எதிர்த்தபோது பாக்யராஜை புதிய வார்ப்பாக பாரதிராஜா படைத்ததையும், பல சில்வர் ஜூப்ளிகள் கொடுத்தபிறகும் 'எங்க டைரக்டர்' என்று வாழ்நாள் முழுக்க குருபக்தியோடு இருந்ததையும் இவர்களிடம் தவிர வேறு எங்கேயாவது பார்க்க முடியுமா ? இவர்கள் இருவரையும் என்றாவது மறக்க முடியுமா??
இதோ இப்போது ஜென் ஸி கிட்ஸ்கள் வந்துவிட்டார்கள். இன்னும் அடுத்தடுத்த தலைமுறைகள் வந்துகொண்டேயிருப்பார்கள். அந்த புதிய தலைமுறையினர் தமிழ் சினிமா வரலாறை எழுதும்போதும் கூட இயக்குனர் என்பதற்கு முதல் அடையாளமாக பாரதிராஜாவும், திரைக்கதை என்பதற்கு முதல் அடையாளமாக பாக்யராஜும் தான் இருந்து கொண்டே இருப்பார்கள். காலம் அவர்களை எப்போதும் கவுரவித்துக் கொண்டேயிருக்கும்.
ஆனால் மார்பளவு சிலை, மணி மண்டபம், ஊர்கூடி பாராட்டு என்று கலைஞர்களுக்கு, சினிமா சங்கங்கங்கள் அவர்கள் மறைந்த பின்னர் செய்யும் கவுரவத்தை அவர்கள் உயிரோடு இருக்கும்போதே செய்தால் எவ்வளவு உணர்ச்சிகரமாக இருக்கும்?
உதாரணத்துக்கு பாரதிராஜாவுக்கு உடல் நலம் குன்றி ஒரு வருடத்துக்கும் மேலாகிறது. அவர் மகன் மனோஜ் இளம் வயதில் மரணமடைந்த பின்னர் இந்த ஒரு வருட காலமும் அவர் சக்கர நாற்காலியில்தான் வலம் வந்தார். அவர் இறப்புக்கு முன்னர் ஏதோ ஒரு தினத்தில் இந்த சங்கங்கள் இணைந்து அதே சக்கர நாற்காலியுடன் அவரை மேடையேற்றி நேற்று பேசியவைகளெல்லாம் பேசியிருந்தால் அவர் மனம் எப்படி நெகிழ்ந்துபோயிருக்கும்?
இனியாவது மூத்த கலைஞர்களை, அவர்கள் உயிரோடு இருக்கும்போதே பாராட்டப் பழகுவோம்.