சபரிமலையில் மோகன்லால் படப்பிடிப்பு நடத்த தடை
மோகன்லால் நடித்து வரும் படம் 'அதிமனோகரம்'. இதில் மோகன்லால் அய்யப்ப பக்தி மிகுந்த ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பை சபரிமலையில் நடத்திக் கொள்ள சில நிபந்தனைகளுடன் தேவசம்போர்ட் அனுமதி அளித்திருந்தது. இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
படப்பிடிப்பு குழுவில் பல மதங்களை சேர்ந்தவர்கள் இருப்பார்கள், அவர்கள் கோவிலின் புனிதத்தை காப்பார்கள் என்று கூற முடியாது. பக்தி இல்லாமல் தொழில்ரீதியாக சபரிமலைக்கு செல்கிறவர்கள் அங்குள்ள கட்டுப்பாடுகளை மதிக்க மாட்டார்கள் என்ற விமர்சனம் எழுந்தது.
இந்த விவகாரம் குறித்து, தேவசம் போர்டு அமைச்சர் கே.முரளிதரன் அளித்த பேட்டியில், “சபரிமலையில் திரைப்படங்களுக்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்க முடியாது. சபரிமலை கோயில் அல்லது ஐயப்பன் தொடர்பான படங்கள் அல்லது ஆன்மிக படங்களுக்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்படலாம். சாதாரண படங்களுக்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்க முடியாது. கோயிலைப் படப்பிடிப்புக்கு வழங்க முடியாது. இதுவே அரசின் கொள்கை என்றார். மோகன்லால் படத்தின் படப்பிடிப்பை நடத்த தற்போது வனத்துறை அனுமதி மறுத்துள்ளது.
அய்யப்பன் புகழ்பாடும் படம் இது. அய்யப்ப பக்தர் மோகன்லால் நடிக்கிறார், தேவசம் போர்ட் விதித்துள்ள அத்தனை நிபந்தனைகளையும் ஏற்று கொண்டுள்ளோம். இது தொடர்பாக நீதிமன்றம் செல்ல தயாரிப்பு தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.