ரோலக்ஸ் போல உருவாக்கப்பட்டு புஸ் ஆகிப்போன டொவினோ தாமஸ் கதாபாத்திரம்
நடிகர் பிரித்விராஜ் நடிப்பில், புலி முருகன் இயக்குனர் வைசாக் இயக்கத்தில் சமீபத்தில் மலையாளத்தில் 'கலிபா' திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் ஆச்சரியமாக நடிகர்கள் மோகன்லால், சவ்பின் சாஹிர் மற்றும் டொவினோ தாமஸ் ஆகியோர் கிளைமாக்ஸில் மட்டும் தலைகாட்டும் கேமியோ கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இதில் டொவினோ தாமஸ் ஒரு நிமிடத்திற்குள் வந்து செல்லும் விதமாக ஐவர் அலெக்சாண்டர் என்கிற கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளார். கிளைமாக்சில் எண்ட் கார்டு போடும்போது அவர் எதிரிகளை கொடூரமாக கொலை செய்துவிட்டு, ரத்தக்கரை படிந்த கத்தி மற்றும் ஆடையுடன் ஸ்டைலாக நடந்து வருவது போல காட்சி உருவாக்கப்பட்டுள்ளது.
இது பார்ப்பதற்கு 'விக்ரம்' படத்தில் கிளைமாக்ஸில் சில நிமிடங்களே வந்து போகும் சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை பின்பற்றி உருவாக்கப்பட்டுள்ளது தெள்ளத் தெளிவாகவே தெரிகிறது. ஆனால், அந்த ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் சூர்யா ஏற்படுத்திய தாக்கத்தை இந்த ஐவர் அலெக்சாண்டர் கதாபாத்திரத்தில் டொவினோ தாமஸ் ஏற்படுத்த தவறிவிட்டார். ஏதோ இது மாஸ் காட்டுவதற்காகவே வலிந்து திணிக்கப்பட்டது போலவே இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.