டார்க்
தயாரிப்பு : எம்.ஜி.ஸ்டூடியோஸ்
இயக்கம் : கல்யாண் கே ஜெகன்
நடிப்பு : அஜய் கார்த்தி, அஞ்சனா நேத்ரன், கே.பாக்யராஜ், நட்டி, இந்துமதி
ஒளிப்பதிவு : ரவி சக்தி
இசை : மனு ரமேஷ்
வெளியான தேதி : ஜூலை 3, 2026
நேரம் : 1 மணிநேரம் 50 நிமிடம்
ரேட்டிங் : 2.5 / 5
ஹவுஸ் ஓனர் பாக்யராஜ் இறந்து கிடக்க, பக்கத்து அறையில் இரத்த காயங்களுடன் பிணமாக கிடக்கும் அஜய் கார்த்தி சம்பந்தப்பட்ட கிரைமை விசாரிக்க ஸ்பாட்டுக்கு வருகிறார் போலீஸ் ஆபீசர் நட்டி. அப்போது திடீரென அஜய் கார்த்தி எழுந்து நட்டி பெயர் சொல்லி அழைத்துவிட்டு 'நீ போய்விடு' என எச்சரித்துவிட்டு, கோமாவுக்கு செல்கிறார். தன் பெயர் அவருக்கு எப்படி தெரிந்தது என புரியாமல் அந்த வழக்கை தீவிரமாக விசாரிக்கிறார் நட்டி.
அப்போது பெங்களூரில் இருந்து சென்னைக்கு வரும் ஹீரோ அஜய் கார்த்தி வீடு தேடி அலைந்ததும், பேச்சிலர் என்பதால் அவருக்கு வீடு கிடைக்காத நிலை. அப்போது தனது ரூம்மேட் 2 பேரை கொடூரமாக கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட கே. பாக்யராஜின் மாடி வீட்டில் அவர் தங்கியதையும் அறிகிறார். இரவு நேரத்தில் அங்கே அமானுஷ்யமான விஷயங்கள் நடக்கின்றன. டிவியில் அப்படிபோடு பாடல் தானாக ஓடுகிறது. ஹீரோவுக்கு மனச்சிதைவு ஏற்பட்டது என்பதையும் ஒரு மனநல டாக்டர் மூலம் நட்டி அறிகிறார். உண்மையில் அந்த 3பேர் இறப்புக்கு என்ன காரணம்? ஹீரோ உயிர் பிழைத்தாரா? அந்த வீட்டில் நடந்தது என்ன? நட்டிக்கு உண்மை தெரிந்ததா? இதுதுான் டார்க் பட கரு
3 கொலை, ஒரு மர்ம சாவு, ஒரு கோமா நிலை என குழப்பான வழக்கை நட்டி விசாரிப்பதும், அந்த வீட்டில் என்ன நடந்தது என்பதையும் திரில்லர் மற்றும் ஹாரர் பாணியில் சொல்கிறது டார்க் கதை. சினிமா கம்பெனி விளம்பர டிசைனுக்காக 3 மாதங்கள் சென்னைக்கு வரும் அஜய் கார்த்தியின் மனநிலை அவர் சந்திக்கும் பிரச்னைகள், அனுமாஷ்ய விஷயங்கள் படத்தின் முக்கியமான விஷயம். ஹீரோயிசம் எதுவும் இல்லாமல் ஒரு சாதாரண இளைஞரான, அமைதியான சுபாவம் உள்ளவராக அவரும் நன்றாகவே நடித்து இருக்கிறார். குறிப்பாக, அவர் வீடு பார்க்க வரும் சீன், பாக்யராஜிடம் உண்மை பேசும் சீன் டச்சிங். இரவு நேரத்தில் தனது வீட்டில் ஏதோ நடப்பது தெரிந்தது பயப்படுவதும், அப்படிப்போடு பாடல் டிவியில் தானாக ஒளிபரப்பப்படும்போது பதறுவதும் பார்வையாளர்களையும் பயப்படவைக்கிறது. ஒரு கட்டத்தில் துாக்கம் வராமல் தவித்து, தவித்து அவர் ஆளே மாறி கதறுவதும், ஓடுவதும், புலம்புவதும் அவரை நல்ல நடிகராக தெரிய வருகிறது.
அந்த முக்கியமான சம்பவம் நடக்கும் இரவில் பாக்யராஜூடன் அமர்ந்து அவர் சரக்கு அடித்துவிட்டு பேசுவது, அடுத்து நடக்கும் சீன்கள் உண்மையில் மிரட்டல். காதல், காமெடி, கலர்புல் இல்லாத இந்த கதையில் ஹாரர், சைக்காலஜிக்கல் விஷயங்களை மட்டுமே நம்பி நடித்துள்ளார் அஜய் கார்த்தி. அவர் நடிப்பு ஓகே என்றாலும், படம் முழுக்க அவரை சுற்றி வருவதும், அவர் கேரக்டரில் பல விஷயங்கள் தெளிவில்லாமல் இருப்பதும் கதையை பின்னோக்கி இழுக்கிறது. அவர் பேயை பார்த்து பயப்படுகிறாரா? மனச்சிதைவா? நடப்பது கற்பனையா என்பதில் தெளிவில்லை.
ஹவுஸ் ஓனராக வரும் பாக்யராஜ் முதல் காட்சியிலே பிணமாக காட்டப்படுகிறார். நமக்கு பக்கென இருக்கிறது. அடுத்து அவரின் மிக இயல்பான நடிப்பு, பேச்சு, ஹீரோ மீது காட்டுகிற பாசம், தனது குடும்பநிலையை, கடன் பிரச்னையை சொல்லும் இடங்கள் படத்தின் உருப்படியான சீன்களில் ஒன்று. அவர் கேரக்டர் குழப்பமாக இருக்கிறது. அவரை பற்றி கிளைமாக்சில் சில விஷயங்களை விளக்கி இருந்தாலும், அதை இன்னும் எளிமை படுத்தி இருக்கலாம்.
போலீஸ் ஆபிசராக வரும் நட்டிக்கு நல்ல வேடம். அவர்தான் கதையை நகர்த்தி, திரைக்கதை முடிச்சுகளை அவிழ்கிறார். ஆனால், பிளாஷ்பேக் சொல்லப்படும்போது ரொம்ப நேரம் காணாமல் போய்விட்டு கிளைமாக்சில் வருகிறார். அப்போது நடக்கும் பத்து நிமிடக் காட்சிகள்தான் டார்க் என்ன மாதிரியான கதை. இயக்குனர் என்ன சொல்ல வருகிறார். அந்த வீட்டில் நடந்தது என்ன என்பதை பார்வையாளர்களுக்கு ஓரளவு எடுத்து சொல்கிறது. அதிலும் நிறைய குழப்பங்கள், விடை தெரியாத கேள்விகள்.
பாக்யராஜ் மகளாக வரும் அஞ்சனா நேத்ரன் இடைவேளை வரை ஓரிரு சீனில் வந்து, ஒன்றிரண்டு வசனம் பேசுகிறார். இந்த கேரக்டர் எதற்கு என நாம் நினைக்கும் நேரத்தில் கடைசியில் அவரை சுற்றி ஒரு முக்கியமான விஷயம் நடக்கிறது. அந்த கேரக்டர் திருப்புமுனையாகவும், பல விஷயங்களுக்கு பதில் சொல்லும் விஷயமாகவும் இருக்கிறது. ஆனாலும் அஞ்சனாவை சரியாக பயன்படுத்தவில்லை, அவர் முகத்தை கூட அதிகம் காண்பிக்கவில்லை. அதிலும் ஏகப்பட்ட குழப்பங்கள். ஹீரோ அம்மாவாக இந்துமதி வருகிறார். அந்த கேரக்டரும் ஒரு இடத்தில் பயம் காண்பித்துவிட்டு காணாமல் போகிறது.
இப்படி படம் முழுக்க ஏகப்பட்ட குழப்பங்கள். மிகவும் உன்னிப்பாக, புத்தியை தீட்டிக்கொண்டு பார்த்தால் மட்டுமே பல விஷயங்கள் புரியும். அதிலும் கடைசியில் சில நிமிடங்கள் போனை நொண்டிகொண்டு, வேறு திசையில் கவனம் செலுத்தினால் படமே புரியாது. தனது திறமையை காண்பிக்க படத்தை அந்த அளவுக்கு நகர்த்தியிருக்கிறார் இயக்குனர். ஹாரர் எபக்ட், இரவு நேர காட்சிகள் அழுத்தம் ஆகியவற்றில் ஒளிப்பதிவும், பின்னணி இசையும் ஓகே. பேயை நேரடியாக காண்பிக்காமல், வேறுவகையில் பயத்தை ஏற்படுத்தியிருப்பதும் புத்திசாலிதனம். மனசிதைவு விஷயங்களில் ஒருவித அழுத்தம் இருக்கிறது.
சைக்காலஜிக்கல் கதையை புது கோணத்தில் சொல்லி இருக்கிறார் அல்லது ஹாரர் கதையை புது மாதிரி காண்பித்து இருக்கிறார் இயக்குனர் என நாமே நினைக்க வேண்டியது இருக்கிறது. இந்த கதையை டாடா இயக்குனர் கணேஷ் கே பாபு எழுதினாரா? அவர் மனதில் நினைத்தது என்ன? அது அப்படியே படமாக வந்து இருக்கிறதா என பார்வையாளர்களுக்கு பெரிய சந்தேகம் வருகிறது. நட்டி, அஞ்சனா கேரக்டர் மூலமாக கடைசியில் படபடவென சில விஷயங்களை சொன்னாலும், இந்த படத்தின் மூலம் என்ன சொல்ல வருகிறார் , நமக்குதான் புரியலையா என்ற கேள்வியும் படம் பார்க்கும் அனைவருக்கும் வருகிறது. மறைந்த இயக்குனர் கே.பாக்யராஜ், நட்டி நடித்து இருப்பதால் படத்தை ஓரளவு பார்க்க முடிகிறது. இவர்கள் இல்லாவிட்டால் படம் இன்னும் டார்க் ஆகியிருக்கும். இது பேய்க் கதையா? மன சிதைவு கருவா? என்று மனக்குழப்பம் அடையும் அளவுக்கு படத்தை டார்க் ஆக்கி இருக்கிறார் இயக்குனர்
டார்க் - குழப்பம்