பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவிலில் தேர் திருவிழா
சிங்கபெருமாள் கோவில்: பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவிலில், வைகாசி மாத தேர் திருவிழா கோலாகலமாக நடந்தது.
சிங்கபெருமாள் கோவில் -அனுமந்தபுரம் சாலையில், அகோபிலவல்லி தாயார் சமேத பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. பல்லவர் கால குடைவரைக்கோவிலான இக்கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் வைகாசி பிரம்மோத்சவம்,விமரிசையாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டிற்கான பிரம்மோத்ச விழா, கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த ஆறு தினங்களாக, சூரியபிரபை, சந்திரபிரபை, யாளி வாகனம், யானை வாகனத்தில் உற்சவர் பிரகலாத வரதர் நான்கு மாட வீதிகளில், வலம் வந்தார். முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நேற்று விமரிசையாக நடந்தது. அதிகாலை உற்சவர் பிரகலாதவரதர், ஸ்ரீ தேவி – பூதேவியருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. கோவிலுக்கு வருகை தந்த ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். கூடியிருந்த பக்தர்கள் ‘கோவிந்தா..., கோவிந்தா... ’ என கோஷம் எழுப்பி பக்தி பரவசமடைந்தனர். மங்கல வாத்தியங்கள் முழங்க வாண வேடிக்கைகளுடன் நான்கு மாட வீதிகளில் வலம் வந்த தேர், காலை 12:00 மணிக்கு நிலையை வந்தடைந்தது. இந்த தேரோட்டத்தில், சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். கூடுவாஞ்சேரி சரக உதவி ஆணையர் தலைமையில் நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.