உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூரியனை தினமும் வணங்க வேண்டும் சுவாமி சிவயோகானந்தா அறிவுரை

சூரியனை தினமும் வணங்க வேண்டும் சுவாமி சிவயோகானந்தா அறிவுரை

மதுரை: சூரியனை கடவுளாக தினமும் வழிபட வேண்டும் என சுவாமி சிவயோகானந்தா பேசினார்.

மதுரை எஸ்.எஸ்.காலனி பிராமண கல்யாண மண்டபத்தில் பகவத்கீதை தொடர் சொற்பொழிவில் சின்மயா மிஷன் சுவாமி சிவயோகானந்தா பேசியது.

பகவத்கீதை பத்தாம் அத்தியாயத்தில் பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு தன்னுடைய சிறப்பான அறிவுரைகளை உபதேசிக்கின்றார். மனிதர்களிடத்தில் நான் முயற்சியாகவும், நீதியாகவும், நேர்மையான முறையில் அடையும் வெற்றியாகவும் இருக்கின்றேன். படைப்பில் உள்ள அனைத்திலும் ஊடுருவி நிற்பதும் நானே. மனிதர்களிடத்தில் மனதினுடைய ஆக்கப்பூர்வமான ஆற்றலாக இருக்கிறேன் என்கிறார். எண்ணங்களை சீர்படுத்தி, உயர்ந்த விஷயங்களுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு வாழ்வோரின் முன்னேறத்தை எவராலும் தடுக்க இயலாது. தூயவாழ்க்கை வாழ்வோருக்கு கடவுளின் துணை என்றும் இருக்கும்.

கடவுள் சிந்தனையோடு தத்தம் கருமங்களைச் செய்து, மகிழ்ந்து திளைப்பவர்கள் உள்ளத்தில் உள்ள அறியாமையைப் போக்கி ஞான விளக்கேற்றி அவர்களுக்கு அருள் செய்வதாக கிருஷ்ணர் கூறுகிறார்.

நான் சூரியன் என்கிறார். சூரிய ஒளியின்றி இவ்வுலகில்லை. சூரியனை கடவுளாகக் கருதி தினமும் வழிபட வேண்டும். சந்திரனும் நானே என்கிறார். இயற்கை நமக்கு பிரதிபலன் பாராது உதவுகிறது. இயற்கையின் வடிவத்தில் ஒவ்வொன்றிலும் கடவுள் வெளிப்பட்டு நிற்பதை உணர்ந்து உலகைக் கடவுளாக பாவித்து வணங்குவது சிறந்த பக்தியாகும். இவ்வாறு பேசினார். ஏற்பாடுகளை பிராமண கல்யாண மஹால் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !