திருத்தணி கோவிலில் திரண்ட பக்தர்கள் மூன்று மணி நேரம் காத்திருந்து தரிசனம்
திருத்தணி: முருகன் கோவிலில், நேற்று நடந்த கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், பொது வழியில் மூன்று மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து, மூலவரை தரிசனம் செய்தனர்.
திருத்தணி முருகன் கோவிலில், நேற்று ஆனி மாத கிருத்திகை விழாவை ஒட்டி, மூலவருக்கு அதிகாலை 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தங்க கிரீடம், தங்க வேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, மூலவருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை 9:00 மணிக்கு, உற்சவர் முருகன் வள்ளி – தெய்வானைக்கு, காவடி மண்டபத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு, உற்சவர் முருகன் வள்ளி – தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில், வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி, தேர்வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சில பக்தர்கள் காவடி எடுத்தும், மொட்டை அடித்தும், தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். நேற்று கிருத்திகை விழா என்பதால், வழக்கத்திற்கு மாறாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் திரண்டனர். அதனால், பொது வழியில் மூலவரை தரிசிக்க, மூன்று மணி நேரம் வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். அதே போல், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டில், இரண்டு மணி நேரம் பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். மலைப்பாதையில் இரு சக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டதால், கோவில் நிர்வாகம் சார்பில், 10 சிறப்பு பேருந்துகள் இலவசமாக இயக்கப்பட்டன. பக்தர்கள் பாதுகாப்பிற்கு, கூடுதல் எஸ்.பி., ஷூபம் திமான் தலைமையில், 100க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபட்டிருந்தனர்.