இருக்கன்குடியில் பணிகள் முடிந்தும் திறக்கப்படாத பக்தர்கள் விடுதிகள்
சாத்துார்: சாத்துார் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட பக்தர்கள் விடுதிகளை ஆடி பெருந்திருவிழாற்கு முன்பாக திறக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு செவ்வாய், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். வெளியூரிலிருந்து வரும் பக்தர்கள் இளைப்பாறுவதற்கும் தங்கி இருந்து சாமி கும்பிடுவதற்கும் போதுமான வசதி இன்றி அவதிப்பட்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து 2021 ஆண்டு பக்தர்கள் வசதிக்காக புதிய விடுதிகள், கழிப்பறைகள் கட்டும் பணிகள் துவங்கப்பட்டது.
ரூ.100 கோடி மதிப்பில் துவங்கப்பட்ட இந்த பணிகளில் தற்போது பெரும்பான்மையான பணிகள் நிறைவடைந்து விட்டன. பக்தர்கள் தங்கி இளைப்பாறுவதற்காக குளிர்சாதன வசதியுடனும் குளிர்சாதன வசதி இல்லாமலும் பல விடுதிகள் கோயில் வளாகத்தில் கட்டப்பட்டுள்ளது.
ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை கோயிலில் நடைபெறும் பெரும் திருவிழாவில் கலந்து கொள்வதற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் கோயிலுக்கு வருவர். இந்த ஆண்டு ஆடி கடைசி வெள்ளி திருவிழா ஆக., 14 ல் நடக்கவுள்ளது.
பக்தர்கள் வசதிக்காக கட்டப்பட்டு வரும் புதிய விடுதிகள் கட்டுமான பணிகளை முடித்தும், முடிவெட்ட விடுதிகளையும் ஆடி பெருந்திருவிழாவிற்கு முன்பாக திறக்கவும் ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கினறனர்.