திருப்போரூர் கந்தசுவாமி கோவில் முழுநேரம் திறந்திருக்க எதிர்பார்ப்பு
திருப்போரூர் கந்தசுவாமி கோவில் நடை, விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில், பக்தர்களின் வசதிக்காக முழுநேரமும் திறந்திருக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற தலமாக திருப்போரூர் கந்தசுவாமி கோவில் விளங்குகிறது.
அறுபடை வீடுகளுக்கு நிகரான வகையில், இங்குள்ள மூலவர், சுயம்பு மூர்த்தியாகவும், ஸ்ரீசக்ர எந்திர முருகனுக்கு சிறப்பு பிரார்த்தனைகளும், அபிஷேகங்களும் நடைபெறுகின்றன.
இக்கோவிலில் நான்கு கால பூஜைகள், கிருத்திகை, சஷ்டி, விசாகம், பவுர்ணமி மற்றும் ஹிந்துக்கள் பண்டிகை நாட்களில், சிறப்பு வழிபாடு நடக்கிறது. இது தவிர, கந்த சஷ்டி, மாசி பிரம்மோத்சவம், மாணிக்கவாசகர் உத்சவம், வசந்த விழா உள்ளிட்ட சிறப்பு விழாக்களும் நடக்கின்றன.
செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் விழா மற்றும் விடுமுறை நாட்களில், வந்து கந்த பெரு மானை வழிபடுகின்றனர். இந்நிலையில், வழக்கமாக, காலை 6:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரையும், மாலை 3:30 மணி முதல் இரவு 8:30 மணி வரையும் நடை திறக்கப்பட்டு சாத்தப்படும்.
ஆனால், கந்த சஷ்டி, மாசி மாத பிரம்மோத்சவம், தைப்பூசம், கிருத்திகை போன்ற விழா நாட்களில் கோவில் நடை முழுநேரமும் திறந்திருக்கும்.
அதேபோல், பக்தர்களின் வசதிக்காக வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமைகளில், கோவில் நடை முழுநேரமும் திறந்திருக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பக்தர்கள் கூறியதாவது: பிரபல கோவில்களுக்கு இணையாக கந்தசுவாமி கோவில் விளங்குகிறது. பல்வேறு வேண்டுதல்களை பக்தர்கள் இங்கு வந்து நிறைவேற்றுகின்றனர். கிருத்திகை போன்ற விழா நாட்களில் கோவில் நடை முழுநேரம் திறந்திருக்கும். மற்ற நாட்களில் மதியம் நடை சாத்தப்பட்டு மாலை திறக்கப்படுகிறது. இதில், ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழுநேரம் திறந்திருந்தால் பக்தர்கள் பொறுமையாக சுவாமி தரிசனம் செய்ய ஏதுவாக இருக்கும். பல்வேறு பகுதிகளில் இருந்து வருவோர் சுவாமியை தரிசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். எனவே, இதுதொடர்பாக கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.