ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித் தேரோட்டம் வீதிஉலா
ராமேஸ்வரம்: ஆடித் திருக்கல்யாணம் விழாவை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ரதவீதியில் ஆடித் தேரோட்டம் உலா வந்தது. ஆக., 5ல் ராமேஸ்வரம் கோயிலில் கொடி ஏற்றத்துடன் ஆடித் திருக்கல்யாண விழா தொடங்கியது. 9ம் நாள் திருவிழாவான இன்று காலை 9:30 மணிக்கு பர்வதவர்த்தினி அம்மன் கோயில் கிழக்கு ரத வீதியில் அலங்கரிக்கப்பட்ட ஆடித் திருத்தேரில் எழுந்தருளினார். பின் கோயில் குருக்கள் தீபாரதனை நடந்ததும் அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின் திருத்தேரின் வடத்தை கோயில் இணை ஆணையர் சுரேஷ், அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் இழுத்து கோயில் நான்கு ரதவீதியில் சிவசிவ என கோஷமிட்டபடி பயபக்தியுடன் வலம் வந்தனர். இதில் பா.ஜ., மாவட்ட தலைவர் முரளிதரன், யாத்திரை பணியாளர் சங்க தலைவர் இளங்கோ, வி.எச்.பி., ராமநாதபுரம் மண்டல அமைப்பாளர் சரவணன், ஹிந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.