பர்வதம் செல்லும் அம்மன்; ஆக., 21ல் ராமேஸ்வரம் கோயில் நடை அடைப்பு
ராமேஸ்வரம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் இருந்து சுவாமி, அம்மன் பர்வதம் மண்டகப்படிக்கு செல்வதால் ஆக., 21ல் கோயில் நடை சாத்தப்படும்.
ஆக.,5ல் ராமேஸ்வரம் கோயிலில் ஆடித் திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. ஆக.,16ல் சுவாமி, அம்மனுக்கு ஆடித் திருக்கல்யாணம் விழா நடந்தது. தொடர்ந்து 16 நாட்கள் கோயிலில் ஆடித் திருவிழா நடந்து வருகிறது. 17ம் நாள் திருவிழாவான ஆக.,21ல் ராமேஸ்வரம் கோயிலில் இருந்து காலை 6 மணிக்கு சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தங்க கேடயத்தில் எழுந்தருளி கெந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு புறப்பாடு நடக்கும். பின் மண்டகபடியில் மகா தீபாராதனை முடிந்து சுவாமி, அம்மன் இரவு 9 மணிக்கு கோயிலுக்கு திரும்புவார்கள். எனவே அன்று காலை 2:30 முதல் 3 மணி வரை ராமேஸ்வரம் கோயிலில் ஸ்படிகலிங்க பூஜையும், தொடர்ந்து கால, சாயரட்சை பூஜைகள் நடக்கும். இதன்பின் காலை 7 மணிக்கு முதல் இரவு 10 மணி வரை நடை சாத்தப்படும் என கோயில் இணை ஆணையர் சுரேஷ் தெரிவித்தார்.