காஞ்சி வரதர் கோவில் வளாகத்தில் மழைநீர் தேங்குவதால் பக்தர்கள் அவதி
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில், கொடிமரம் அருகே மழைநீர் தேங்குவதால், பக்தர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு, தினமும் உள்ளூர், வெளியூரில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவில் கொடிமரம் சுற்றியுள்ள பகுதியில் சிமென்ட் கல் பதிக்கப்பட்டுள்ளது. கல் பதிக்கும்போது நீரோட்டம் பார்க்காமல் பதிக்கப்பட்டதால், காஞ்சிபுரத்தில் மழை பெய்யும்போது, வரதராஜ பெருமாள் கோவில் கொடிமரம் அருகில் மழைநீர் தேங்குவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பெய்த மழைக்கு வழக்கம்போல, கொடிமரம் அருகில் மழைநீர் தேங்கியது. இதனால், நேற்று காலை கோவிலுக்கு சென்ற பக்தர்கள் மழைநீரில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே, கோவில் கொடிமரம் அருகில் மழைநீர் தேங்காமல் இருக்க வடிகால் வசதி ஏற்படுத்த கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மழை பெய்யும்போது, வரதராஜ பெருமாள் கோவில் கொடிமரம் அருகில் தேங்கும் மழைநீர் அரை மணி நேரத்தில் வடிந்துவிடும். இருப்பினும் முற்றிலும் மழைநீர் தேங்காமல் இருப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.