ராஜராஜன் கால கல்வெட்டு தேரெழுந்துாரில் கண்டெடுப்பு
சென்னை: மயிலாடுதுறை மாவட்டம், தேரெழுந்துார் வேதபுரீஸ்வரர் கோவிலில், முதலாம் ராஜராஜன் கால கல்வெட்டு கண்டெடுக்கப் பட்டுள்ளது.
மத்திய தொல்லியல் துறையின், கல்வெட்டியல் பிரிவினர், தமிழகத்தின் மயிலாடுதுறை மாவட்டம், தேரெழுந்துார் கிராமத்தில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவிலில், சமீபத்தில் ஆய்வு செய்தனர். அப்போது, இதுவரை நகலெடுக்கப்படாத, ஒரு வரலாற்று சிறப்பு மிக்க, கல்வெட்டை கண்டறிந்தனர்.
கோவிலின் அர்த்த மண்டபத்தில் உள்ள துாணில், சோழர் கால தமிழ் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட ஒரு கல்வெட்டில், சிவனுக்கு அமுது படைக்க, பொன்னை தானமாக அளித்த தகவல் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இது குறித்து, கல்வெட்டியல் பிரிவு இயக்குநர் முனிரத்தினம் கூறியதாவது;
இந்த கல்வெட்டு, கோவிராஜ கேசரிவர்மனான முதலாம் ராஜராஜனின் 18வது ஆட்சியாண்டான, 1003ல் பொறிக்கப்பட்டுள்ளது. அதில், உய்யக் கொண்டார் வளநாட்டில் உள்ள பிரம்மதேயமான திருவழுந்துார் மகாசபையில், திருக் கடவுடை நாயனார் தெய்வத்திற்கு அமுது படைக்க, 21 கழஞ்சு தங்கம், தானமாக வழங்கப்பட்டுள்ளது.
அந்த அறக்கொடையில் இருந்து, கிடைத்த வட்டியில், அமுது படைப்பதற்கான நெல் மற்றும் மற்ற தேவைகளுக்கான பொருட்களை வாங்கிக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.