உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரம் சிவன் கோவில் சுவற்றில் பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு

விழுப்புரம் சிவன் கோவில் சுவற்றில் பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு

விழுப்புரம்: திண்டிவனம் அருகே பேராவூர் கிராமத்தில், விழுப்புரம் வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் கள ஆய்வில் ஈடுபட்டபோது, முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தைய கல்வெட்டு கண்டறியப்பட்டது.


இது குறித்து செங்குட்டுவன் கூறியதாவது: பேராவூர் சிவன் கோவில் சுற்றுச்சுவருக்கு வெளியே,14 வரிகளில் அமைந்த கல்வெட்டு காணப்படுகிறது. அதனை மூத்த கல்வெட்டு ஆய்வாளர் விஜய வேணுகோபால் வாசித்தார். சுபஸ்ரீ பூமியும் திருமதுவும் புணர என தொடங்கும் இக்கல்வெட்டின் காலம், முதலாம் குலோத்துங்க சோழனின் 3வது ஆட்சியாண்டு (கி.பி.1073) ஆகும். பேராவூரில், கோவில் கொண்டிருந்த இறைவன் திருவிணீச்சுரம் உடைய மகாதேவர்க்கு‌, விளக்கெரிக்க 90 ஆடுகள் தானமாக கொடுக்கப்பட்டுள்ளன. இத்தானத்தை பெருமூக்கில் நாட்டு நன்மூக்கிலை சேர்ந்த வெள்ளாளன் சேனாவரையன் கோதுகுல வனந்தை வில்லவன் பல்லவரையன் என்பவர் வழங்கி இருக்கிறார்.  இதில் குறிப்பிட்டுள்ள பெருமூக்கில் என்பது தற்போது பெருமுக்கல் என்றும், நன்மூக்கில் என்பது நல்முக்கல் என்றும் அழைக்கப்படுகிறது. மேலும், 953 ஆண்டுகளுக்கு முன்பு இக்கிராமம் பேரயூர் என்று வழங்கப்பட்டுள்ளது. தற்போது இப்பெயர் பேராவூர் என மருவியுள்ளது.  ஜயங்கொண்ட சோழ மண்டலத்தில், ஒய்மா நாட்டிற்குட்ட நாடுகளில் ஒன்றாக இந்த பேரயூர் நாடும் இருந்திருக்கிறது. இந்த அரிய தகவல்களை சொல்லும் இந்தக் கல்வெட்டினை, உரிய முறையில் பாதுகாக்க வேண்டும்.


பேராவூர் கிராமத்தில் பல்லவர் காலத்தைச் சேர்ந்த (கி.பி.8-9 ஆம் நூற்றாண்டு) கொற்றவை, தவ்வைச் சிற்பங்களும் காணப்படுகின்றன. இவ்வூர் பல்லவர் காலத்திலும் அதனைத் தொடர்ந்து சோழர் காலத்திலும் சிறப்புடன் இருந்தது என்பதற்கான ஆதாரமாக இந்தச் சிற்பங்களும், கல்வெட்டும் அமைந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது, சினிமா இயக்குனர் ராமலிங்கம், ஊராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி, வழக்கறிஞர் கார்த்திக், சுரேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !