திருப்போரூர் துலுக்காணத்தம்மன் கோவிலில் பால்குட விழா விமரிசை
திருப்போரூர்; கோவளம் துலுக்காணத்தம்மன் கோவிலில் ஆடி திருவிழாவை முன்னிட்டு, இன்று பால்குட விழா விமரிசையாக நடந்தது.
திருப்போரூர் அடுத்த கோவளம் ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டைமாநகரில் துலுக்காணத்தம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் ஒன்பதாவது வார ஆடித்திருவிழா நேற்று முன்தினம், மஹா அபிஷேகத்ததுடன் தொடங்கியது. இதையொட்டி, இன்று காலை, பால்குடம் ஊர்வலம் நடந்தது. இதில், பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர், கோவளம் புளூ பீச் அருகே உள்ள ஏகாத்தம்மன் கோவிலில் இருந்து, துலுக்காணத்தம்மன் கோவிலுக்கு, மேள தாளங்கள் முழங்க பால் குடங்களை ஊர்வலமாக எடுத்து சென்றனர். அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து, சிறப்பு பூஜை நடத்தி வழிபட்டனர். தொடர்ந்து, ஊரணிப்பொங்கல் வைத்தல், காப்பு கட்டுதல், அம்மன் சக்திகரகம் வீதியுலா, இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. 13ம் தேதி காலை 11:00 மணிக்கு கூழ்வார்த்தல் விழாவும், மாலை 6:00 மணிக்கு தீ மிதி விழாவும், இரவு 8:00 மணிக்கு தேர்வீதி உலாவும், இரவு 10:00 மணிக்கு தெருகூத்தும் நடைபெறுகிறது.