sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

நாடு போற்றும் நல்லவர்கள் (11)

/

நாடு போற்றும் நல்லவர்கள் (11)

நாடு போற்றும் நல்லவர்கள் (11)

நாடு போற்றும் நல்லவர்கள் (11)


ADDED : ஆக 07, 2019 08:26 AM

Google News

ADDED : ஆக 07, 2019 08:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமதேவர்

“இதென்ன... ஆற்றில் மரப்பெட்டி மிதந்து வருகிறதே?”

திறந்து பார்த்தார் தையல் கலைஞரான தாமாஜி. ஆண் குழந்தை ஒன்று அதில் சிரித்தபடி இருந்தது.

“ஆ…என் மனைவியின் ஆசை இந்த வயதான காலத்தில் நிறைவேறி விட்டதே?” - குழந்தையுடன் வீட்டுக்கு வந்தார். தாமாஜியின் மனைவியான கோனாபாயும் மகிழ்ந்தாள். குழந்தைக்கு 'நாமா' என பெயரிட்டனர்.

பக்திமானாக வளர்ந்தார் நாமா. பின்னர், இவரே நாமதேவர் என பெயர் பெற்றார்.

பாண்டுரங்கனின் கோயிலில் பூஜை செய்து நைவேத்தியம் படைப்பது தாமாஜியின் வழக்கம்.

ஒருநாள் மட்டும் வெளியூர் செல்ல இருந்ததால் சிறுவன் நாமதேவனை பூஜைக்கு செல்லுமாறு தாமாஜி கூறினார். பூஜை முறையை மகனுக்குச் சொல்லி அனுப்பினாள் கோனாபாய். நாமதேவனும் புறப்பட்டான். பழைய பூக்களை களைந்துவிட்டு, பகவானுக்கு நீராட்டி, வஸ்திரம் அணிவித்து விளக்கு ஏற்றினான். நைவேத்யத்தை பாண்டுரங்கனின் முன் வைத்து சாப்பிடுமாறு வேண்டினான். அவர் சாப்பிடுவாரா? நேரம் தான் போனது. சிறுவன் அழ ஆரம்பித்தான். ''பாண்டுரங்கா! என்னை அம்மா கோபித்துக் கொள்வாள்' என்று சொல்லிப் பார்த்தான். 'ஒரு வேளை அப்பா வராததால் நீ ஏற்கவில்லையா?'' என்று கேட்டான்.

“சுவாமி! எனக்காக சீக்கிரம் சாப்பிடு ” என்று கெஞ்சினான்.

பக்தனின் கதறலை பாண்டுரங்கன் பொறுப்பாரா? நேரில் தோன்றி பிரசாதத்தை சாப்பிட்டு ஆசியளித்தார். மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு வந்தான் சிறுவன். பாத்திரம் காலியாக இருப்பதைக் கண்ட அம்மா, “உணவை யாருக்குக் கொடுத்தாய்?” எனக் கேட்டாள்.

நடந்ததைக் கூறினான் மகன். அம்மாவோ நம்பவில்லை.

மறுநாள் நாமதேவனுடன் கோயிலுக்குப் போனார் தாமாஜி. மறைந்து நின்று நடப்பதைக் கவனித்தார்.

உணவை பாண்டுரங்கன் சாப்பிடவில்லை. நாமதேவன் அழுதான். ''தந்தையுடன் வந்திருப்பதால் வர மாட்டேன்'' என நாமதேவனுக்கு மட்டும் அசரீரி கேட்டது. நாமதேவனுக்கு கண்ணீர் பெருகியது. இதைக் கண்டு இரங்கிய பாண்டுரங்கன் நேரில் தோன்றி உணவை சாப்பிட்டார். தாமாஜியும் தரிசித்து மகிழ்ந்தார்.

“என் கண்ணே. நீ என் மகனாக வந்ததால் தானே இந்த பாக்கியம் பெற்றேன்'' என்று மகனைக் கட்டித் தழுவினார். இதை அறிந்த தாயும் மகிழ்ந்தாள்.

நாமதேவர் சற்றே வளர்ந்து இளைஞரானார்

ஒருநாள் ''இந்த துணிகளை சந்தையில் விற்று வா” என்று தைத்த துணிகளை மூடையாகக் கட்டி கொடுத்தார் தாமாஜி. வழியில் ஒரு மரத்தடியில் மூடையை வைத்து விட்டு, அதன் மீது ஒரு கல்லை வைத்தார். சற்று நேரத்தில் தியானத்தில் ஆழ்ந்தார்.

கண் விழித்த போது பொழுது சாய்ந்திருந்தது. மூடை மீது வைத்த கல்லே, துணிகளை விலைக்கு வாங்கி கொண்டதாக கருதி, துணிகளை விட்டு விட்டு புறப்பட்டார்.

''அப்பா... நம் துணிகளை எல்லாம் 'கல்' ஒன்று வாங்கி கொண்டது'' என்றார். பெற்றோர் நம்பவில்லை.

மறுநாள் அந்தக் கல்லை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார் நாமதேவர். பெற்றோரின் வேதனையோ அதிகரித்தது. கல்லை வீட்டில் வைத்து விட்டு பாண்டுரங்கன் கோயிலுக்கு ஓடினார் நாமதேவர்.

அன்றிரவு அந்தக் கல் தங்கக் கட்டியாக மாறியது.

நாளடைவில் நாமதேவருக்கு திருமணம் நடந்தது. மனைவியின் பெயர் ராதாபாய். ஆண் குழந்தை ஒன்று பிறக்க, 'நாராயணன்' எனப் பெயரிட்டு வளர்த்தனர்.

எப்போதும் பஜனை, தியானம் என்றே பொழுதைக் கழிக்க, ''குடும்பத்தைக் கவனிக்க வேண்டாமா'' என்று தாய் அடிக்கடி கேட்டதால் நாமதேவர் வருத்தப்பட்டார்.

''பாண்டுரங்கா! எனக்கு உன்னை மட்டும் தானே தெரியும். எனக்கு ஏன் குடும்பப் பொறுப்பை கொடுத்தாய்?” என்று அழுதார். பாண்டுரங்கர் புன்னகையுடன் அவர் முன் தோன்றினார், '' நாமதேவா! நீ வேறு நான் வேறு அல்ல. உன் கவலை தான் என் கவலை” என்றார்.

“எப்படி நாம் ஒன்றாக முடியும்? செல்வத்தின் பிரதிநிதியான மகாலட்சுமியின் கணவர் நீங்கள். பட்டும் வைரமும் அணிந்து, தங்கத்தட்டில் தினமும் உண்பவர். ஆனால் நானோ காசில்லாத ஏழை அல்லவா?” என்றார் நாமதேவர்.

ஒருநாள் தன் கணவர் கோயிலுக்கு சென்ற போது, மாமியாரிடம் வீட்டின் நிலைமையைக் கூறி அழுதாள் மருமகள் ராதாபாய்.

அப்போது வீட்டு வாசலில் வியாபாரி ஒருவர் குரல் கொடுத்தார்.

'' நாமாவின் பால்ய நண்பர் நான். என் பெயர் கேசவ் சேத். உங்களுக்கு கொடுப்பதற்காகவே பை நிறைய தங்க நாணயங்கள் கொண்டு வந்திருக்கிறேன்'' என்றார்.

அவரை வரவேற்று, சாப்பிடுமாறு வேண்டினாள் ராதாபாய்.

“நாமா இல்லாத நேரத்தில் நான் சாப்பிடுவது முறையல்ல; இன்னொரு நாள் வந்து சாப்பிடுகிறேன்'' என்று சொல்லி பையைக் கொடுத்துச் சென்றார்.

''பாண்டுரங்கா! எப்போதும் நாமதேவன் உன் நினைவாக இருக்கிறானே!'' என மகனை நினைத்து வருந்தினாள் கோனாபாய்.

“வருந்தாதே! எல்லாம் நன்மையாக முடியும்'' என அசரீரி ஒலித்தது.

பாண்டுரங்கனே நண்பர் வடிவத்தில் வந்து உதவியதை அனைவரும் புரிந்து கொண்டனர்.

தன்னை நம்பிய பக்தர்களை பாண்டுரங்கன் ஒருபோதும் கைவிட்டதில்லை.

தொடரும்

அலைபேசி: 98841 56456

வேதா கோபாலன்






      Dinamalar
      Follow us