ADDED : ஏப் 26, 2024 02:54 PM

கோயம்புத்துார் மாவட்டத்தில் உள்ளது தென்சேரிமலை. இம்மலையின் மற்றொரு பெயர் செஞ்சேரி, மந்திரகிரி. மனக்குறை உள்ளவர்கள் இங்குள்ள முருகனை தரிசிக்க வாருங்கள்.
சூரபத்மனை அழிக்க சூரசம்ஹார மந்திரத்தை சிவபெருமானிடம் தனக்கு உபதேசிக்கும் படி முருகப்பெருமான் வேண்டினார்.கடம்பமரம், தர்ப்பை, கங்கை ஒரே நேர்கோட்டில் உள்ள இம்மலையில் முருகன் தவமிருந்து மந்திர உபதேசம் பெற்றார். 285 படிகளை கொண்ட இம்மலையில் குழந்தை வேலவர், இடும்பன், கன்னிமார், மந்திரசித்தி விநாயகர், பெரியநாயகி அம்மன், கைலாசநாதர் சன்னதிகள் உள்ளன.
கருவறையில் வேலாயுதசுவாமி பன்னிரு கரங்களுடன் அருள் செய்கிறார். அவர் இடது கையில் சேவலை வைத்திருப்பது சிறப்பு. அருகே வள்ளி தெய்வானை தாமரை மலர் ஏந்தி நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். சிவபெருமானிடம் தவமிருந்து மந்திரத்தை பெற்று இம்மலை மீது அமர்ந்ததால் மந்திரகிரி வேலாயுதசாமி என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.
ஒரு செயலை தொடங்குவதற்கு முன்பும், ஒரு செயல் முடிவதற்கும் பூ உத்தரவு கேட்கும் வழிபாடு இக்கோயிலில் செய்கின்றனர். இக்கோயிலில் மகாவிஷ்ணு தன் கையில் சிவலிங்கத்தை வைத்தவாறு காட்சி தருகிறார். நவக்கிரக சன்னதியில் சூரியபகவான் மேற்கு நோக்கி இருக்க மற்ற கிரகங்கள் அவரை பார்த்தபடி உள்ளனர்.
மலை அடிவாரத்தில் ஞானதண்டபாணி சன்னதி உள்ளன. இக்கோயிலில் ஞானதீர்த்தம், வாலி தீர்த்தம், லட்சுமி தீர்த்தம், பிரம்ம தீர்த்தங்கள் உள்ளன.இங்கு மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தீர்த்தக்கட்டத்தில் 48 நாட்கள் நீராடி, மந்திரகிரி நாதரை வழிபட குணமடைவர். அர்த்தஜாம பூஜை நிறைவில் பிரசாதமும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. பவுர்ணமி நாளில் பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர்.
எப்படி செல்வது: சூலுாரில் இருந்து காமநாயக்கன்பாளையம் வழியாக 32 கி.மீ.,
விசேஷ நாள்: ஐப்பசி கந்தசஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம்.
நேரம்: காலை 6:00 - 1:00 மணி; மாலை 4:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 98435 52616
அருகிலுள்ள தலம்: சின்னமலை சுந்தரராஜப்பெருமாள் கோயில் 3 கி.மீ.,
நேரம்: காலை 6:00 - 1:00 மணி; மாலை 5:00 - 7:00 மணி
தொடர்புக்கு: 96591 13184