25 வருடங்களுக்குப் பிறகு ஹவுஸ்புல் காட்சிகளுடன் ரீ ரிலீஸான விஷ்ணுவர்தனின் 'கோடிகோபா'
பல வருடங்களுக்கு முன்பு வெளியாகி சூப்பர் ஹிட் ஆன பிரபல ஹீரோக்களின் படங்கள் சமீப காலமாக தொடர்ந்து ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. அவற்றில் சில படங்கள் வசூல் ரீதியாகவும் வரவேற்பு பெற்று வருகின்றன. தென்னிந்திய அளவில் தமிழ் மற்றும் தெலுங்கில் தான் இந்த ரீ ரிலீஸ் கலாசாரம் அதிக அளவில் இருக்கிறது மலையாளத்தில் ஓரளவு இருந்தாலும் கன்னடத்தில் இந்த ரீ ரிலீஸ் தாக்கம் பெரிய அளவில் இல்லை. இந்த நிலையில் கடந்த 2001ல் கன்னடத்தில் நடிகர் விஷ்ணுவர்தன் நடிப்பில் வெளியான 'கோடிகோபா' திரைப்படம் தற்போது 25 வருடங்கள் கழித்து ரீ ரிலீஸ் ஆகி உள்ளது.
இது ரஜினிகாந்த் நடித்த 'பாட்ஷா' படத்தின் ரீமேக் ஆக உருவான படம். இதை நாகண்ணா என்பவர் இயக்கியிருந்தார். வெளியான சமயத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்த படம், விஷ்ணுவர்தனின் திரையுலக பயணத்தில் ஒரு மைல்கல்லாகவும் அமைந்தது. இந்த நிலையில் இங்கே தமிழில் எப்படி பாட்ஷாவுக்கு எப்போதும் ஒரு கிரேஸ் இருக்கிறதோ அதேபோலதான் கோடி கோபா படமும் அதே கிரேஸை தக்க வைத்துள்ளது. அதனால் பல இடங்களில் இந்த படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த பிரியங்கா உபேந்திரா, ஒரு தியேட்டரில் இந்த படத்தின் முதல்நாள் ரீ ரிலீஸ் காட்சியை பார்த்து ரசித்தார். ''இந்த படம் 2001ல் வெளியான சமயத்தில் நான் பெங்களூருவில் இல்லாததால் இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சியில் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது. அந்தக் குறை இப்போது தீர்ந்து விட்டது” என்று கூறியுள்ளார் பிரியங்கா.