கதை கேட்காமல் ஒப்புக்கொண்ட ஆர்யா
நடிகர் ஆர்யா நடிப்பில் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது மிஸ்டர் எக்ஸ் திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஒரு உளவாளியாக நடித்திருக்கிறார் ஆர்யா. இந்த படம் கலவையாக விமர்சனங்களை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து அடுத்ததாக ஆர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் படம் வேட்டுவன். சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் ரஞ்சித் டைரக்ஷனில் மீண்டும் ஆர்யா நடித்து வரும் படம் இது. விரைவில் வெளிவரும் விதமாக இந்த படம் தயாராகிறது. இதைத் தொடர்ந்து சார்பட்டா பரம்பரை 2 திரைப்படமும் உருவாக இருக்கிறது.
சமீபத்திய பேட்டி ஒன்றில் ஆர்யா பேசும்போது, ‛‛என்னிடம் வேட்டுவன் கதையை இயக்குனர் பேசியபோது இந்த கதையை கேட்டால் நீங்கள் நடிக்க மாட்டீர்கள். அதனால் கதையைக் கேட்காமல் நடித்துவிட்டு செல்லுங்கள் என்று கூறினார். அவர் மீது இருந்த நம்பிக்கையால் தான் வேட்டுவன் படத்தில் கதை கேட்காமல் நடிக்க ஒப்புக்கொண்டேன். அதேபோல இயக்குனர் பாலா என்னை ஒரு கழுதையாக நடிக்கச் சொன்னால் கூட அப்படி நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன். இந்த இரண்டு இயக்குனர்கள் மீது அந்த அளவிற்கு நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.