ரஜினி சொன்ன தலைப்பு... அப்பாவாக நடித்த அனுபவம் : கே.எஸ்.ரவிக்குமார் பகிர்ந்த சுவாரஸ்யம்
விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் கர படம், ஏப்ரல் 30ல் ரிலீஸாகிறது. இதில் தனுஷ் அப்பாவாக நடித்து இருக்கிறார் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். சில நாட்களாக அவர் கர குறித்தும், பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேசி வருவதாவது:
டிராகன் படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து தான் இந்த படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டு இருந்தார். அவரும், கர பட இயக்குனரும் நண்பர்கள். அதனால், இந்த கதையை கேள்விப்பட்டு, அப்பா வேடத்தில் நான் நடிக்க வேண்டும் என்று விரும்பினார். ஏற்கனவே தங்கமகன் படத்தில் நான் தனுஷ் அப்பாவாக நடித்து இருந்தாலும், கர படத்தில் வேறு மாதிரியான கெட்அப், எனக்கு பல் செட் செய்து, முகத்தில் இன்னும் சில செயற்கை மேக்கப் போட்டு ஆளையே மாற்றி இருக்கிறார்கள்.
நான் பல வெற்றி படங்களை இயக்கிவிட்டேன். இப்போது அதிக படங்களில் நடித்து வருகிறேன். நடிப்பது சுகமாக இருக்கிறது. டென்ஷன் இல்லை, நிறைய நேரம் கிடைக்கிறது. அப்போது படத்தில் நடிப்பவர்கள் என் பட அனுபவங்களை கேட்கிறார்கள். அவர்களுக்கு நிறைய சொல்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் தனுஷ் ரொம்பவே அமைதியாக இருப்பார். அந்த கேரக்டருடன் ஒன்றிபோய்விடுவார். அவருடன் யாரும் பேச முடியாது. நான் படப்பிடிப்பு தளத்தில் கோபமாக கத்திக் கொண்டு இருப்பேன். மைக்கில் திட்டுவேன். அப்போதுதான் செட் நம் கண்ட்ரோலில் இருக்கும். ஆனால், இந்த பட இயக்குனர் அமைதியானவர். ஏதாவது கரெக்ஷன் என்றால் சம்பந்தப்பட்ட நடிகர்கள் அருகில் வந்து சொல்லிக் கொண்டு போவார். நாம் ஏதாவது எக்ஸ்ட்ராவாக நடித்தால், இது நல்லா இருக்குது. ஆனால், வேணாம் என அமைதியாக சொல்வார்.
மலையாளத்தில் சுராஜ் வெஞ்சரமூடு படங்களை பார்த்து ரசித்து இருக்கிறேன். அவர் நடித்த ஆண்ட்ராய்டு குட்டப்பன் படத்தை தமிழில் ரீமேக் செய்து நடித்தேன். அவருடன் இந்த படத்தில் நடித்தது மகிழ்ச்சி. அவரை பார்க்கலாம் என நினைத்தபோது, அவரே என்னிடம் வந்து பேசி, என் படங்களை பற்றி விவாதித்து , என்னுடன் போட்டோ எடுத்து சந்தோஷப்பட்டார்.
இப்போது படப்பிடிப்புதளத்துக்கு என் மனைவியுடன் செல்கிறேன். அங்கே அவரும், இந்த படத்தின் ஹீரோயின் மமிதா பைஜூவும் நண்பர்கள் ஆகிவிட்டார்கள். சமீபகாலத்தில் நான் பார்த்த ஹீரோயின்களில் மமிதா துறுதுறுவென இருக்கிறார். அனைவரிடமும் பந்தா இல்லாமல் பழகுகிறார். அவ்வப்போது ரஜினி சாருடன் பேசுகிறேன். படையப்பா 2 எடுக்கலாம் என விவாதித்தோம். ஆனால், படையப்பாவை இந்த கதை மிஞ்சுமா என சந்தேகம் வர, அமைதியாகிவிட்டோம். அடுத்த சில ஆண்டுகள் அவரும் பிஸி என்பதால், நானும் நடிப்பில் கவனம் செலுத்துகிறேன்.
இந்த படத்தின் தலைப்பை கேட்டு அதென்ன கர என யோசித்தேன். கர என்பது கரை ஓரத்தில் இருக்கிற காவல் தெய்வம். ராமநாதபுரம் பின்னணியில் இந்த கதை நடக்கிறது. படையப்பா என்ற தலைப்பை முதலில் ரஜினி சார் சொன்னபோது இதென்ன தலைப்பு என்றேன். ஆறு படையப்பன் என்பதில் சுருக்கம். இந்த தலைப்பு மக்களிடம் போய் சேரும் என்றார். அது நடந்தது. நான் இயக்கி படங்கள் அதிகம். அதில் வெற்றி விகிதமும் அதிகம். இப்போது இயக்குனர்கள் குறைவான எண்ணிக்கையில் படம் இயக்குகிறார்கள். அதற்கு பல்வேறு காரணங்கள். அதேசமயம் தமிழில் வெற்றிவிகிதம் மாறவில்லை. முன்பு குறைவான படங்கள் வந்தது. இப்போது 200, 250 படங்கள் வருவதால் தோல்வி அதிகமாக தெரிகிறது''.
இவ்வாறு கே.எஸ்.ரவிக்குமார் பேசினார்.