ரீமாசென், தமன்னா வரிசையில் இடம்பிடிப்பேன்: ரோஸ்மின் நம்பிக்கை
மாடலிங் துறையில் அனைவருக்கும் அறிமுகமானவராக இருந்த ரோஸ்மின், சில மலையாள படங்களில் நடித்து விட்டு தற்போது 'பிரேக்பாஸ்ட்' படத்தின் மூலம் தமிழுக்கு வந்திருக்கிறார். 'செல்லமே, ஆனந்த தாண்டவம்' படங்களை இயக்கிய ஏ.ஆர்.காந்தி கிருஷ்ணா நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கி உள்ள படம்.
செல்லமே படத்தில் ரீமா சென், ஆனந்த தாண்டவம் படத்தின் தமன்னா உள்ளிட்ட பெரிய ஹீரோயின்களுக்கு பிளாட்பார்ம் அமைத்துக் கொடுத்தவர். அந்த வரிசையில் நல்லதொரு பிளாட்பார்ம் ரோஸ்மினுக்கு கிடைக்குமா என்பது இன்னும் ஒரு சில நாளில் தெரிந்து விடும். படம் வருகிற 24ம் தேதி வெளியாகிறது.
இந்த நிலையில் படத்தில் நடித்திருப்பது பற்றி அவர் கூறியிருப்பதாவது: 'செல்லமே' படத்தில் ரீமா சென் கதாபாத்திரம் மிகவும் வலுவானது. அதேபோலதான், 'ஆனந்ததாண்டவம்' படத்திலும் அப்பாவியான அதேசமயம் வலுவான கதாபாத்திரத்தில் தமன்னா நடித்திருப்பார். ரீமா சென், தமன்னா கதாப்பாத்திரங்கள் தான் கதையை நகர்த்தி செல்லும் வகையில் முக்கியமானதாக இருக்கும்.
இந்தப் படங்கள் மற்றும் கதாநாயகிகளின் கதாபாத்திரங்களுக்கு நான் மிகப்பெரிய ரசிகை. அதனால், காந்தி கிருஷ்ணா சாரின் படத்தில் எனக்கு கதாநாயகிக்கான வாய்ப்பு வந்தபோது மிகவும் மகிழ்ந்தேன். இந்தப் படத்தில் நடித்திருப்பது எனக்கு பெருமை நானும் ரீமா சென், தமன்னா வரிசையில் இடம்பிடிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.
'பிரேக்பாஸ்ட்' படத்தில் பல உணர்வுப்பூர்வமான அதேசமயம் கியூட்டான ரொமான்டிக் தருணங்களுடன் கூடிய வலுவான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். என்னுடைய பன்முக நடிப்புத்திறமையை வெளிப்படுத்தியிருக்கும் இந்த கதாபாத்திரம் நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும். அவர்களும் என்னுடைய கதாபாத்திரத்தில் தங்களை பொருத்திப் பார்ப்பார்கள் என நம்புகிறேன். இந்த கதாப்பாத்திரம் நிச்சயம் அவர்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தும். இவ்வாறு கூறினார்.