விஷ்ணு விஷால் நடிக்கும் 'இரண்டு வானம்' கதை இதுதான்: இயக்குனர் தகவல்
விஷ்ணு விஷால் காதல் படங்களில் நடிப்பது அபூர்வமானது. ஆக்ஷன், காமெடி மற்றும் கிரைம் திரில்லர் படங்களிலேயே அதிகம் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் நடித்து வரும் ரொமான்டிக் காதல் படம் 'இரண்டு வானம்'.'முண்டாசுப்பட்டி' மற்றும் 'ராட்சசன்' படங்களை இயக்கிய ராம்குமார் இயக்கி உள்ள படம். விஷ்ணு விஷால் மற்றும் ராம்குமார் இணையும் மூன்றாவது படம் இதுவாகும்.
மமிதா பைஜு நாயகியாக நடித்துள்ளனர். இவர்கள் தவிர முனீஷ்காந்த், காயத்ரி ஆகியோரும் நடித்துள்ளனர். திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.
படத்தின் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி உள்ளது. அடுத்த மாதம் வெளியாகும் என்று தெரிகிறது. படம் பற்றி இயக்குனர் ராம்குமார் கூறியிருப்பதாவது: என் முதல் படம் 'முண்டாசுப்பட்டி' காமெடி, சின்னதாக சோஷியல் மெசேஜுடன் பீரியட் பேன்டசியாக அமைந்த படம். இரண்டாவது படம் 'ராட்சசன்' த்ரில்லராக உருவானது. இந்த படம் காதலை பின்னணியாக கொண்டு உருவாகி உள்ளது. சமூக நீதியை மிகவும் முக்கியமாக நினைக்கிற ஒரு பெண்ணும், வாழ்க்கையை எப்போதும் கலகலப்பாக, ஜாலியாக எடுத்துக்கொள்ள விரும்பும் ஒரு பையனும் ஒரு புள்ளியில் சந்திக்கிறார்கள். முரண்பாடுகள் மிக்க இவர்கள் எப்படி காதலிக்கிறார்கள், ஒன்று சேர்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.
காதல் என்பதையே அறியாத ஒருவனுக்குக் கிடைக்கிற பெண்ணின் அன்பு அவனை எந்த அளவுக்கு மாற்றுகிறது, அதற்குப் பிறகு அவன் அந்தப் பெண்ணின் வாழ்க்கையை மாறுவதற்கு எப்படித் துணையாக இருக்கிறான் என்பதும் இதில் கதையாகிறது. வாழ்க்கையில் அன்பு கிடைக்கிற போது ஒவ்வொருவரும் எப்படியெல்லாம் மாற்றத்தை எதிர்கொள்ள முடிகிறது என்பதையும் இந்த படம் பேசுகிறது. என்றார்.