விஜய் விட்ட இடத்தைப் பிடிக்கிறாரா சூர்யா?
தமிழ் சினிமா உலகில் இன்றைய தலைமுறையினரிடம் அதிக வரவேற்பைப் பெற்ற ஒரு நடிகராக விளங்கியவர் விஜய். அவருடைய படங்கள் சுமாராக இருந்தால் கூட 100 கோடி, 200 கோடி என வசூலிக்கும்.
கடந்த 10 வருடங்களில் அவர் நடித்து வெளிவந்த 'தெறி' - 150 கோடி, 'பைரவா - 110 கோடி, 'மெர்சல்' - 250 கோடி, 'சர்க்கார்' - 250 கோடி, 'பிகில்' - 300 கோடி, 'மாஸ்டர்' - 250 கோடி, 'பீஸ்ட்' - 230 கோடி, 'வாரிசு' - 300 கோடி, 'லியோ' - 600 கோடி, 'தி கோட்' - 400 என வசூலித்ததாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய் தற்போது சினிமாவை விட்டு விலகி, அரசியல் பக்கம் சென்று தமிழக முதல்வராகவும் பதவியேற்றுவிட்டார். அவர் இனிமேல் சினிமா பக்கம் வர வாய்ப்பேயில்லை. அவர் விட்டுச் சென்ற இடத்தை பிடிக்கப் போவது யார் என்ற போட்டி ஆரம்பமாகிவிட்டது.
அவர் பதவியேற்ற சில நாட்களிலேயே சூர்யா நடித்த 'கருப்பு' படம் வெளியாகி உள்ளது. இந்தப் படம் தமிழ் சினிமாவில் சில புதிய சாதனைகளையும் படைத்து வருவதாகச் சொல்கிறார்கள். தொடர்ந்து 5 நாட்களாக இரட்டை இலக்கத்தில் இதன் வசூல் இருக்கிறதென படத்தின் தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தற்போதைய தகவல்படி இப்படம் 175 கோடி வசூலைக் கடந்திருக்கலாம்.
தொடர்ந்து 5 நாட்கள் அதுவும் வார நாட்களில் ஒரு படம் இரட்டை இலக்கங்களில் வசூலைப் பெறுவது சாதாரணம் கிடையாது. ஆனால், அப்படி ஒரு வசூலை 'கருப்பு' படம் பெற்றுள்ளது. இந்த வார இறுதிக்குள் 200 கோடி வசூலையும் கடந்துவிடும் என்கிறார்கள்.
இப்போதைக்கு விஜய் விட்டுச் சென்ற அந்த வசூல் இடத்தை முதல் நடிகராக சூர்யா நிரப்பி இருக்கிறார். இவருக்கு இந்த வருடத்திலேயே அடுத்தடுத்து 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்', 'சூர்யா 47' ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. 'கருப்பு' வெற்றியின் காரணமாக இந்தப் படங்களுக்கு நல்ல வியாபாரம் நடக்க வாய்ப்புள்ளது. இந்தப் படங்களும் சூர்யாவுக்கு சிறப்பான படங்களாக அமையும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்தப் படங்களும் அப்படி அமைந்துவிட்டால் வசூல் ஓட்டப்பந்தயத்தில் முதலிடத்தை நோக்கி சூர்யா ஓட முடியும்.