உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : பத்மினிக்கு புதுமையான தண்டனை கொடுத்த ஸ்ரீதர்

பிளாஷ்பேக் : பத்மினிக்கு புதுமையான தண்டனை கொடுத்த ஸ்ரீதர்

1960ம் ஆண்டு வெளிவந்த படம் 'மீண்ட சொர்க்கம்'. ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் ஜெமினி கணேசன், டி. ஆர். ராமச்சந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். மதுரம் பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக ஸ்ரீதர் இயக்கிய முக்கோணக் காதல் கதை. படத்தைத் தோளில் சுமந்த கதாபாத்திரம் என்றால் அது பத்மினியுடையதுதான். அந்த அளவுக்கு அவருக்காகவே வடிக்கப்பட்ட பெண் மையப் படமாக அமைந்தது.

அப்போது பத்மினி பிசியான நடிகையாக இருந்தார். படப்பிடிப்புகளுக்கு தாமதமாக வருவது அவரது ஒரு ஸ்டைலாகவே இருந்தது. ஆனால் ஸ்ரீதர் எல்லா விஷயங்களிலும் பர்பெக்டாக இருப்பவர். எந்த காரணம் கொண்டும் படப்பிடிப்பு ஒரு நிமிடம் தாமதமாக நடத்தப்படக் கூடாது என்பதில் உறுதியானவர். அவருடைய ஒட்டுமொத்த குழுவுமே கட்டுப்பாடுடன் இருக்கும். எந்த நடிகர் நடிகையுடன் ஒப்பந்தம் போட்டாலும் படப்பிடிப்புகளுக்கு குறிப்பிட்ட நேரத்தில் சரியாக வர வேண்டும் என்பது அதில் ஒரு விதியாக இருக்கும்.

வழக்கம்போல பத்மினி இந்த படத்திற்கு தாமதமாக வந்து கொண்டிருந்தார். ஸ்ரீதர் உள்ளிட்ட பலரும் அவருக்காக காத்திருக்க வேண்டிய சூழ்நிலைகள் பல நாட்கள் ஏற்பட்டது. ஸ்ரீதர் யாரையும் கடிந்து பேசியோ, கோபப்பட்டு பேசியோ பழக்கம் இல்லாதவர். என்றாலும் பத்மினிக்கு அவர் தவறை உணர்த்த வேண்டும் என்று விரும்பினார்.

ஒரு நாள் காலையில் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாக தயாரிப்பு நிர்வாகியிடம் குழந்தைகள் விளையாடும் கோலிக் குண்டுகளை வாங்கி வரச் சொன்னார். படப்பிடிப்பில் உள்ள அனைவருக்கும் அதை கொடுத்து அந்த தளத்திலேயே விளையாடச் சொன்னார்.

சித்ராலயா கோபு, சி.வி.ராஜேந்திரன், சுந்தரம், திருச்சி அருணாசலம் ஆகியோரை அழைத்து அவர்களுடன் இவரும் கோலி விளையாடினார்.

பத்மினி வழக்கம்போல் தாமதமாக வந்து, மேக்-அப் போட்டுக்கொண்டு அரங்கில் வந்து நின்ற பத்மினி, இயக்குநர் ஸ்ரீதரைப் பார்த்து, “சார், நான் ரெடி!” என்றார். “இரும்மா…இப்பதான் விளையாட ஆரம்பிச்சிருக்கோம்” என்றார் ஸ்ரீதர். “ஷூட்டிங் நேரத்துல கோலி ஆடினா எப்படி?” என்று பத்மினி படபடக்க, “வேற என்ன செய்யறது, காலையிலேர்ந்து எல்லாரும் சும்மா உக்கார்ந்திருக்கோம். விளையாடி முடிச்சுட்டு வாரோம் வெயிட் பண்ணு என்றார்.

இதனை புரிந்து கொண்டு ஸ்ரீதரிடம் மன்னிப்பு கேட்ட பத்மினி மறுநாள் முதல் சரியான நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வரத் தொடங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !